எத்தனை தடவை சொன்னாலும் நீயெல்லாம் திருந்தவே மாட்டியாப்பா..? ஸ்டோக்ஸை எச்சரித்த அம்பயர்
2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எச்சில் தடவியதையடுத்து, அம்பயர் வீரேந்தர் ஷர்மா அவரை கடுமையாக எச்சரித்தார்.
கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக, வீரர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்தவகையில், வீரர்களின் பாதுகாப்பு கருதி, பந்தை ஷைன் செய்ய எச்சில் தடவுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் பவுலர்கள் கடும் பாதிப்படைந்தாலும், அந்த விதியை பாதுகாப்பு கருதி பின்பற்றுவது அவசியமாகிறது. அதையும் மீறி மறந்தபடி, எந்த வீரராவது பந்தில் எச்சில் தடவினால், எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என்பதுதான் விதிமுறை.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியா நிர்ணயித்த 337 ரன்கள் என்ற இலக்கை 44வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின்போது, ரீஸ் டாப்ளி வீசிய 4வது ஓவரின் 3வது பந்தை வீசுவதற்கு முன் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், பந்தை எச்சில் தொட்டு தேய்த்தார். அதைக்கண்ட அம்பயர் வீரேந்தர் ஷர்மா, பென் ஸ்டோக்ஸை கடுமையாக எச்சரித்ததுடன், கேப்டன் பட்லரிடம், மீண்டும் இதுமாதிரி நடந்தால் இந்திய அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என்று எச்சரித்தார்.
பந்தில் எச்சில் தொட்டு தேய்ப்பது தடை செய்யப்பட்ட பின், இதேமாதிரி ஏற்கனவே சிலமுறை ஸ்டோக்ஸ் அப்படி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வீரர் ஒருமுறை அல்லது இருமுறை மறதியில் செய்யலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் மறதியில் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.