IPL 2022: விலகும் VIVO.. ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை தட்டித்தூக்கிய இந்திய நிறுவனம்..!
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து விவோ விலகியதையடுத்து, இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான டாடா குழுமம் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெற்றுள்ளது.
ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு நடக்கவுள்ள 15வது சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளதால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.
லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக களமிறங்குகின்றன. அதனால் இந்த சீசனிலிருந்து ஐபிஎல் இன்னும் பிரம்மாண்டமாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. இந்த சீசனுக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடக்கவுள்ளது.
இந்நிலையில், 2018ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்துவந்த விவோ, ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து விலகியுள்ளது. 2018 - 2021 வரை ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த விவோ நிறுவனம் ரூ.2200 கோடி பிசிசிஐக்கு வழங்கியது. 2020ம் ஆண்டு இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்னை பூதாகரமாக வெடித்ததால், 2020ம் ஆண்டு ஐபிஎல் சீசன் மட்டும் விவோ ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து விலகிவிட்டு, மீண்டும் 2021ம் ஆண்டு ஸ்பான்சர் செய்தது.
2021ம் ஆண்டுடன் விவோ நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் உரிமம் முடிந்த நிலையில், அத்துடன் விலகிக்கொண்டது விவோ. இதையடுத்து ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெறுகிறது இந்திய முன்னணி தொழில் நிறுவனமான டாடா குழுமம். 2022 மற்றும் 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடர்களின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை டாடா குழுமம் பெற்றிருப்பதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.