சொதப்பிய தமிழ்நாட்டு இளம் வீரர்கள்.. அசத்திய சீனியர் வீரர்கள்
சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் தமிழ்நாடு அணி ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் கேரளா அணியை வீழ்த்திய தமிழ்நாடு, இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.
மூன்றாவது போட்டியில் உத்தர பிரதேச அணியை எதிர்கொண்டு ஆடிவருகிறது தமிழ்நாடு அணி. திருவனந்தபுரத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி, தமிழ்நாடு அணியை முதலில் பேட்டிங் ஆட பணித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி, தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி விஜயின் அரைசதத்தால் 20 ஓவரில் 168 ரன்கள் அடித்துள்ளது. தொடக்க வீரர் ஜெகதீசன் இந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. 7 பந்தில் 2 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரன முரளி விஜயுடன் இணைந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார்.
அரைசதம் அடித்த முரளி விஜய் 42 பந்தில் 51 ரன் அடித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விஜய் சங்கர் 14 பந்தில் 28 ரன்கள் அடித்தார். இளம் வீரர்களான ஷாருக்கான 3 ரன்னும் வாஷிங்டன் சுந்தர் 5 ரன்னும் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தனர். விஜய் சங்கர் 19வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்துவிட்டார். அடித்து ஆட வேண்டிய கடைசி 2 ஓவர்களில், களத்தில் இல்லாமல் 19வது ஓவரின் முதல் பந்திலேயே விஜய் சங்கர் அவுட்டானார். அவர் கவனமாக ஆடியிருந்தால் கடைசி 12 பந்துகளில் கணிசமான ரன்னை அடித்திருக்கலாம்.
உத்தர பிரதேச அணி 169 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிவருகிறது.