அமித் ஷாவின் மகனும் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷாவுக்கு எழுந்து நின்று கை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஐபிஎல் 14வது சீசனில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. 2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல்லில் 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய 4 சீசன்களில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஐபிஎல் 13வது சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கே முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, அந்த படுதோல்வியிலிருந்து மீண்டெழுந்து, 14வது சீசனில் கோப்பையை கைப்பற்றியது. மும்பை இந்தியன்ஸூக்கு (5 முறை) அடுத்தபடியாக அதிகமுறை (4) கோப்பையை வென்ற அணி என்ற சாதனைக்கு சொந்தக்கார அணியாகவும், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாகவும் திகழ்கிறது சிஎஸ்கே.

சிஎஸ்கே அணி 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதற்காக, சிஎஸ்கே அணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்த விழாவில் சிஎஸ்கே கேப்டன் தோனி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, சிஎஸ்கே அணி உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன், ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பாட்டீல், இந்திய அணியின் உலக கோப்பை வின்னிங் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்ட பிசிசிஐ செயலாளரும், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா உரையாற்றிவிட்டு தனது இருக்கையில் அமரச்செல்லும்போது மரியாதை நிமித்தமாக மேடையில் அமர்ந்திருந்த என்.ஸ்ரீநிவாசன் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடத்தில் சென்று கை கொடுத்தார். ஸ்ரீநிவாசன் ஜெய் ஷாவுக்கு உட்கார்ந்தபடியே கைகொடுத்தார். ஆனால் தன்னிடம் வந்த ஜெய் ஷாவிற்கு எழுந்து நின்று கை கொடுத்து ஒருசில நொடிகள் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

ஜெய் ஷாவிற்கு முதல்வர் ஸ்டாலின் எழுந்து நின்று கை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. வயது, பதவி, அனுபவம் என அனைத்துவகையிலும் ஜெய் ஷாவை விட பன்மடங்கு உயர்ந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனாலும் அவர் தன்னிடம் வந்தபோது தனது பதவியை எல்லாம் கருத்தில்கொண்டு சீன் போடாமல், வயது வித்தியாசம் கூட பார்க்காமல் எழுந்து நின்று கை கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த செயல் அவரது தன்னடக்கத்தை காட்டினாலும், திமுக தொண்டர்கள் இதை ரசிக்கவில்லை.