Ranji Trophy: ஜெகதீசன், பிரதோஷ் பால், விஜய் சங்கர் அபார சதங்கள்..! அசாமுக்கு எதிராக தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி
ரஞ்சி தொடரில் அசாம் அணியை இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.
ரஞ்சி தொடரில் தமிழ்நாடு - அசாம் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 540 ரன்களை குவித்தது.
தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் வழக்கம்போலவே அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். ஜெகதீசன் 125 ரன்களை குவித்தார். ஆனால் சாய் சுதர்சன் 2 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இந்திரஜித் 77 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மிடில் ஆர்டர் வீரர்களான விஜய் சங்கர் மற்றும் பிரதோஷ் பால் ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். பிரதோஷ் பால் 153 ரன்களையும், விஜய் சங்கர் 112 ரன்களையும் குவிக்க, முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 540 ரன்களை குவித்தது.
WFI தலைவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க 7 பேர் அடங்கிய கமிட்டி அமைப்பு..! IOA நடவடிக்கை
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய அசாம் அணியில் 7ம் வரிசையில் இறங்கிய புர்காய்ஸ்தான் மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடி அதிகபட்சமாக 74 ரன்கள் அடித்தரர். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அசாம் அணி. தமிழ்நாடு அணி சார்பில் அஜித் ராம் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
274 ரன்கள் பின் தங்கியதால் ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை ஆடிய அசாம் அணியில் ரிஷவ் தாஸ் அரைசதம் அடித்து அதிகபட்சமாக 58 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர் ராகுல் ஹஸாரிகா 40 ரன்கள் அடித்தார். முதல் இன்னிங்ஸை போலவே 2வது இன்னிங்ஸிலும் அசாம் வீரர்கள் பேட்டிங்கில் சொதப்ப, 204 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி படுதோல்வியடைந்தது.
தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.