தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த அந்த ஒரு கேட்ச் தான் இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்துள்ளது.

முக்கியமான தருணத்தில் சூர்யகுமார் யாதவ் பிடித்த அந்த ஒரு கேட்ச் தான் இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்துள்ளது. அவர் மட்டும் அந்த கேட்சை பிடிக்கவில்லை என்றால் பந்து சிக்ஸருக்கு சென்றிருக்கும். அடுத்த 5 பந்தில் 10 ரன்களை டேவிட் மில்லர் எளிதாக எடுத்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு வெற்றி தேடி கொடுத்திருப்பார்.

ஆனால், ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. முதல் பந்திலேயே டேவிட் மில்லர் விக்கெட்டை பாண்டியா எடுத்துக் கொடுத்தார். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்களும், அக்‌ஷர் படேல் 47 ரன்களும் எடுத்துக் கொடுத்தனர்.

பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியானது ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு குயீண்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து ஓரளவு ரன்கள் எடுத்துக் கொடுத்தனர். இதில் ஸ்டப்ஸ் 31 ரன்கள் எடுத்து அக்‌ஷர் படேல் பந்தில் போல்டானார். அதன் பிறகு டி காக்கும் 39 ரன்களில் நடையை கட்டினார்.

இதையடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால் அடுத்து கூடுதலாக 2 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கடைசி வரை நின்று விளையாடிய டேவிட் மில்லர் 19.1 ஆவது பந்தில் சூர்யகுமார் யாதவ்விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இருந்த ஒரு வாய்ப்பும் மில்லர் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ரபாடா பவுண்டரி விளாசினார். அடுத்த 2 பந்துகளில் சிங்கிள் எடுக்கப்படவே 5ஆவது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்கப்படவே தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை டிராபியை இந்திய அணி கைப்பற்றியது. முதல் முறையாக ரோகித் சர்மா டிராபியை வென்று கொடுத்தார். இந்த நிலையில் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் டிரெஸிங் ரூமில் சிறந்த பீல்டருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஒரே ஒரு கேட்ச் தென் ஆப்பிரிக்கா பக்கம் இருந்த போட்டியை இந்தியா பக்கம் திருப்பி அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தது. மேலும், இந்திய அணி டிராபி வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்தது. அதுதான் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச். அதற்காக அவருக்கு சிறந்த பீல்டருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அந்த விருதை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…