அவரு பேசுறத கேட்குறத்துலாம் நாங்க இலங்கைக்கு வரல..! சூர்யகுமார் யாதவ் செம பதிலடி
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணியை 2ம் தர அணி என்று கூறிய ரணதுங்காவின் கருத்து குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து கூறியுள்ளார்.
விராட் கோலி தலைமையில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோர் அடங்கிய மெயின் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.
அதனால் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இலங்கைக்கு சென்றுள்ளார்.
வரும் 13ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா - இலங்கை இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா வலுவான அணியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, 2ம் தர அணியை இலங்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், இது இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவமானம் என்றும் இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா விமர்சித்திருந்தார்.
ரணதுங்காவின் விமர்சனத்துக்கு, அப்படியெல்லாம் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியமே விளக்கமளித்திருந்தது. ஆகாஷ் சோப்ராவும் ரணதுங்காவிற்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார். இந்திய முன்னாள் வீரர் ரிதீந்தர் சோதியும் இதுகுறித்து கருத்து கூறியிருந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான தீப்தாஸ் குப்தாவும் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், ரணதுங்காவின் கருத்து குறித்து பேசியுள்ள சூர்யகுமார் யாதவ், நாங்கள் மற்றவர்கள் பேசுவது குறித்து யோசிக்கவெல்லாம் இங்கு வரவில்லை. மகிழ்ச்சியாக கிரிக்கெட் ஆடி, பல நேர்மறையான அனுபவங்கள் மற்றும் நினைவுகளை பெற்றுச்செல்லவே வந்திருக்கிறோம் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.