பேப்பர் கேப்டன் கோலி.. ஒரேயொரு லைக்கால் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட சூர்யகுமார் யாதவ்
விராட் கோலியை பேப்பர் கேப்டன் என விமர்சித்து உருவாக்கப்பட்ட மீம்ஸை சூர்யகுமார் யாதவ் லைக் போட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு இடையே பனிப்போர் நிலவிவருவதாக கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே ஒரு சர்ச்சை இருந்துவந்தது. ஆனால் அவர்கள் இருவரும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், பொதுவெளியிலும் களத்திலும் ஒற்றுமையுடனேயே இருந்துவந்தனர்.
ஆனாலும் அவர்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாகவும், ஓய்வறையில் இருவருக்கும் தனித்தனி ஆதரவாளர்கள் இருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் பரவிக்கொண்டே இருந்தன.
அதை உறுதிப்படுத்தும் வகையில் சூர்யகுமார் யாதவின் செயல்பாடு அமைந்துள்ளது. சூர்யகுமார் யாதவ் உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் போதிலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுவரும் நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டது, முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்குள்ளானது. சூர்யகுமாரும் அதிருப்தியடைந்தார்.
அந்த அதிருப்தியையும் ஆதங்கத்தையும் மனதில் வைத்திருந்த சூர்யகுமார் யாதவ், விராட் கோலியை பேப்பர் கேப்டன் என்று கிண்டலடித்து, ரோஹித் சர்மாவிற்கு கெத்தை ஏற்றும் விதமாக உருவாக்கப்பட்டிருந்த மீம்ஸை டுவிட்டரில் லைக் செய்தார் சூர்யகுமார் யாதவ்.
இது ரோஹித் சர்மாவிற்கும் விராட் கோலிக்கும் தனித்தனி ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சூர்யகுமாரின் செயல்பாடு அமைந்துள்ளது. சூர்யகுமாரின் செயலைக்கண்ட ரசிகர்கள், சூர்யகுமாரின் இந்த செயலால், இந்திய அணியில் வாய்ப்பை பெறுவது சிரமம் என்று கருத்து தெரிவித்துவருகின்றனர்.