என்னை கவர்ந்த 4 இளம் இந்திய வீரர்கள் இவர்கள் தான்..! சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்
தன்னை கவர்ந்த 4 இளம் இந்திய வீரர்கள் யார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த அணியாக கோலோச்சிவருகிறது. ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு சர்வதேச போட்டிகளில் ஆடுமளவிற்கு ஏராளமான திறமைசாலிகளை பெற்றுள்ளது இந்திய அணி.
ஏகப்பட்ட இளம் வீரர்கள் நிறைந்த அணியாக இந்திய அணி திகழ்கிறது. முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் என இளம் வீரர்கள் பெரியளவில் உருவெடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணியில் இவர்களை போன்ற இளம் துடிப்பான வீரராக அறிமுகமாகி இந்திய அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்து ஓய்வுபெற்றுவிட்ட சுரேஷ் ரெய்னா, தன்னை கவர்ந்த 4 இளம் வீரர்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சுரேஷ் ரெய்னா, கர்நாடகாவை சேர்ந்த தேவ்தத் படிக்கல், மகாராஷ்டிராவை சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜடேஜாவிற்கு பதிலாக ஆடிய அக்ஸர் படேல் ஆகிய மூவரும் என்னை வெகுவாக கவர்ந்தனர். அக்ஸர் படேல் கடுமையாக பயிற்சி செய்து தன்னைத்தானே வளர்த்துக்கொண்டுள்ளார்.
ரிஷப் பண்ட்டை இளம் வீரர்கள் பட்டியலில் சேர்க்கமுடியாது. அவர் சீனியர் வீரர்கள் பிரிவில் சேர்ந்துவிட்டார். முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசுகிறார். இந்த இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு ராகுல் டிராவிட்டுக்குத்தான் கிரெடிட் கொடுத்தாக வேண்டும் என்றார் ரெய்னா.