உங்க பிளான் என்னனு புரிஞ்சுக்கவே முடியலயேடா.. கேப்டனுக்குத்தான் வெளிச்சம்! இந்திய அணியை செமயா விளாசிய கவாஸ்கர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெங்கடேஷ் ஐயரை பந்துவீசவைக்காததன் பின்னணியில் இருக்கும் லாஜிக்கை புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று சுனில் கவாஸ்கர் விளாசியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி பார்லில் நடந்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, டெம்பா பவுமா (110) மற்றும் வாண்டர் டசனின் (129*) அபாரமான சதத்தால் 50 ஓவரில் 296 ரன்களை குவித்தது.
297 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 265 ரன்கள் மட்டுமே அடித்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என தென்னாப்பிரிக்கா அணி ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பலால் தான் இந்திய அணி தோற்றது. அதேவேளையில், பவுலிங்கும் அவ்வளவு சிறப்பாக இல்லை. பும்ரா மட்டுமே நன்றாக வீசினார். 10 ஓவரில் 48 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார் பும்ரா. புவனேஷ்வர் குமார் 64 ரன்கள் விட்டுக்கொடுக்க, ஷர்துல் தாகூர் 72 ரன்களை வாரி வழங்கினார். ஸ்பின்னர்கள் அஷ்வின் மற்றும் சாஹல் ஆகிய இருவரும் தலா 53 ரன்களை வழங்கினர். அஷ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய பவுலர்கள் அனைவருமே ரன்களை வாரிவழங்கியதுடன், டெம்பா பவுமா - வாண்டர் டசன் ஜோடியை பிரிக்க முடியாமல் திணறியபோதிலும், ஆல்ரவுண்டராக அணியில் எடுக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயருக்கு பவுலிங் வழங்கப்படவில்லை. வெங்கடேஷ் ஐயர் 6வது பவுலிங் ஆப்சன் தேவை என்பதற்காக ஆல்ரவுண்டராகத்தான் அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் மற்ற பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியபோதிலும், வெங்கடேஷ் ஐயருக்கு பவுலிங் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், வெங்கடேஷ் ஐயரை பந்துவீசவைக்காததால் அதிருப்தியடைந்த சுனில் கவாஸ்கர், அதுகுறித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய கவாஸ்கர், வெங்கடேஷ் ஐயரை ஏன் பந்துவீசவில்லை என்பதற்கான பதில் கேப்டனுக்குத்தான் தெரியும். கடந்த 4-5 மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டவர் வெங்கடேஷ் ஐயர். அதனால் தான் அவரை அணியிலேயே எடுத்தனர். அப்படியிருக்கையில், விக்கெட்டே விழாத நிலையில் கூட, வெங்கடேஷ் ஐயருக்கு 2 ஓவர்கள் கொடுக்காதது வியப்பாக இருக்கிறது. அவர் 20-25 ரன்களை விட்டுக்கொடுத்தாலும், அவரது பவுலிங் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்திய அணியின் திட்டம் என்னவென்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவருக்கு ஒரு ஓவர் கூட வழங்கப்படாததன் பின்னணியில் இருக்கும் லாஜிக் என்னவென்று தெரியவில்லை என்று கவாஸ்கர் விளாசியுள்ளார்.