ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் ஆடுவதை விட, ஆஷஸ் தொடரில் ஆடுவதுதான் முக்கியம் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய போட்டிகளை வரும் செப்டம்பர் - அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துகிறது பிசிசிஐ.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன்பின்னர் டி20 உலக கோப்பை, ஆஷஸ் தொடர் என பல முக்கியமான தொடர்கள் நடக்கவிருப்பதால், ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் சில பெரிய வீரர்கள் ஆடுவது சந்தேகம் தான்.

பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் ஆடமாட்டார்கள். இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடும் ஆஸி., நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும், அவர் ஆடப்போவதில்லை என்பதை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல்லில் நான் ஆடும்போதே நான் 100 சதவிகித ஃபிட்னெஸை பெற்றிருக்கவில்லை. வலிநீக்கிகளை எடுத்துக்கொண்டுதான் பேட்டிங் ஆடினேன். இன்னும் நான் முழு ஃபிட்னெஸை அடையவில்லை. டி20 உலக கோப்பையில் ஆட விருப்பம்தான். ஆனால் அதைவிட டெஸ்ட் போட்டிகள் தான் எனக்கு மிக முக்கியம். ஆஷஸ் தொடர் தான் எனக்கு ரொம்ப முக்கியம். ஆஷஸில் சிறப்பாக ஆடவேண்டும் என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்தடுத்து முக்கியமான தொடர்கள் இருப்பதால், ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் ஆடமாட்டார் என்பது அவரது பேச்சிலிருந்தே தெரிகிறது.