டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியான பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த இலங்கை
இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி வென்ற நிலையில், டி20 தொடரில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து இலங்கை அணி வென்றது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று தொடரை வென்றுவிட்ட இலங்கை அணி, மூன்றாவது போட்டியிலும் பாகிஸ்தான் அணியை இலங்கை வீழ்த்தியது.
லாகூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சரியாக ஆடவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஒஷாடா ஃபெர்னாண்டோ அதிரடியாக ஆடி 48 பந்துகளில் 78 ரன்களை குவித்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால் இலங்கை அணி 20 ஓவரில் 147 ரன்கள் அடித்தது.
148 ரன்கள் என்ற கடினமில்லாத இலக்கையே பாகிஸ்தான் அணியால் அடிக்கமுடியவில்லை. தொடக்க வீரர் ஃபகார் ஜமான் முதல் பந்திலேயே கோல்டன் டக்கானார். பாபர் அசாம் இந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. 27 ரன்களில் பாபர் அசாம் அவுட்டாக, பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்த ஹாரிஸ் சொஹைலும் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, இமாத் வாசிம், ஆசிஃப் அலி ஆகியோரும் ஏமாற்றமளிக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 134 ரன்கள் மட்டுமே அடித்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இதையடுத்து டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருக்கும் பாகிஸ்தான் அணியை, அதன் சொந்த மண்ணில் 3-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இலங்கை அணி.