#SLvsENG மேத்யூஸ் சதம்; டிக்வெல்லா, சண்டிமால், தில்ருவான் பெரேரா அரைசதம்! முதல் இன்னிங்ஸில் இலங்கை நல்ல ஸ்கோர்
ஆஞ்சலோ மேத்யூஸின் சதம் மற்றும், டிக்வெல்லா, சண்டிமால், தில்ருவான் பெரேரா ஆகியோரின் பொறுப்பான அரைசதத்தால், முதல் இன்னிங்ஸில் 381 ரன்கள் அடித்தது இலங்கை அணி.
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்துவருகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது. இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் பெரேரா ஆறு ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஃபெர்னாண்டோ டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான திரிமன்னே ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ஆடி 42 ரன்கள் அடித்தார்.
3 விக்கெட்டுக்கு பிறகு அனுபவ வீரர் ஆஞ்சலோ மேத்யூஸுடன், ஐந்தாம் வரிசையில் இறங்கிய கேப்டன் சண்டிமால் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். மேத்யூஸும் சண்டிமாலும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், அரைசதம் அடித்த சண்டிமாலை 52 ரன்களுக்கு வீழ்த்தி அந்த ஜோடியை பிரித்தார் மார்க் உட். அனுபவத்தை பயன்படுத்தி அபாரமாக ஆடிய மேத்யூஸ் சதமடித்தார். மேத்யூஸ் 107 ரன்களுடனும் டிக்வெல்லா 19 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் அடித்திருந்த நிலையில், மேத்யூஸும் டிக்வெல்லாவும் 2ம் நாளான ஆட்டத்தை தொடர்ந்தனர். களத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே இன்று வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்து 110 ரன்களுக்கு மேத்யூஸ் ஆட்டமிழக்க, டிக்வெல்லா சிறப்பாக ஆடி 92 ரன்களை விளாசி, வெறும் 8 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
டிக்வெல்லாவுடன் இணைந்து சிறப்பாக ஆடிய தில்ருவான் பெரேராவும் அரைசதம் அடித்தார். பெரேரா ஒருமுனையில் நின்றாலும், மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்ததால், கடைசி விக்கெட்டாக 67 ரன்களுக்கு பெரேரா ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 381 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.