#ENGvsSL என்னடா நடக்குது இங்க.. சாம் கரனிடம் சரணடைகிறது வாழ்ந்து கெட்ட இலங்கை அணி..!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெறும் 21 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இலங்கை அணி.
1996ல் ரணதுங்கா கேப்டன்சியில் உலக கோப்பையை வென்ற இலங்கை அணி, அடுத்த 15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சியது. ஜெயசூர்யா, முரளிதரன், அட்டப்பட்டு, சமிந்தா வாஸ், சங்கக்கரா, ஜெயவர்தனே, மலிங்கா என பல தலைசிறந்த வீரர்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி, 2007 மற்றும் 2011 ஒருநாள் உலக கோப்பைகளில் ஃபைனல் வரை சென்று ஃபைனலில் தோற்று கோப்பையை இழந்தது.
மிகச்சிறந்த டாப் அணியாக திகழ்ந்த இலங்கை அணி, அண்மைக்காலமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு அணியாகவே மதிக்கப்படுவதில்லை. அந்தளவிற்கு படுமோசமாக ஆடிவருகிறது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி, டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் படுமோசமாக தோற்ற இலங்கை அணி, 2வது ஒருநாள் போட்டியிலும் மிக மோசமாக பேட்டிங் ஆடிவருகிறது.
லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மாலை இந்திய நேரப்படி 5.30 மணிக்கு தொடங்கிய 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்துவரும் இலங்கை அணி 21 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.
கேப்டனும் தொடக்க வீரருமான குசால் பெரேரா 2வது ஓவரிலேயே டக் அவுட்டானார். குசால் பெரேராவை டக் அவுட்டாக்கிய சாம் கரன், அதே ஓவரிலேயே 3ம் வரிசையில் இறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோவை 2 ரன்னில் வீழ்த்தினார். தனது அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான நிசாங்காவையும் 5 ரன்னில் வீழ்த்தினார் சாம் கரன்.
அவரைத்தொடர்ந்து சாரித் அசலங்காவும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். டேவிட் வில்லியின் பந்தில் அசலங்கா அவுட்டாக, வெறும் 21 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.