இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்ற அமைக்கப்பட்ட கமிட்டியில் பெருந்தலைகள் நியமனம்
இலங்கை கிரிக்கெட்டை சரிவிலிருந்து மீட்டெடுத்து மீண்டும் சர்வதேச அரங்கில் கெத்தாக நடைபோட வைக்க புதிய கமிட்டியை அமைத்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.
ரணதுங்கா கேப்டன்சியில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை 1996ம் ஆண்டு வென்ற இலங்கை அணி, ஜெயசூரியா, அட்டப்பட்டு, அரவிந்த் டி சில்வா, சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், சங்கக்கரா, ஜெயவர்தனே ஆகிய உலகத்தரம் வாய்ந்த தலைசிறந்த வீரர்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் கெத்தாக வலம்வந்த இலங்கை அணி, இப்போது படுமோசமான நிலையில் உள்ளது.
2007, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைகளில் ஃபைனலுக்கு முன்னேறி, கோப்பையை இழந்த இலங்கை அணி, 2014ல் டி20 உலக கோப்பையை வென்றது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முன்னணி அணிகளில் ஒன்றாக திகழ்ந்த இலங்கை அணி, இப்போது கோமாவில் உள்ளது எனலாம். ஏனெனில் அந்தளவிற்கு படுமோசமாக ஆடிவருகிறது.
தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி, சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆனது. டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசைகளில் முறையே 6, 7 மற்றும் 8வது இடங்களில் உள்ளது.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க, இலங்கை கிரிக்கெட்டுக்காக மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ள ஆல்டைம் சிறந்த வீரர்களான அரவிந்த் டி சில்வா, சங்கக்கரா, முத்தையா முரளிதரன், ரோஷன் மஹனாமா ஆகியோர் அடங்கிய புதிய கமிட்டியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டை தலைநிமிர்ந்து நடக்கவைத்த முன்னாள் ஜாம்பவான்களான இவர்களால் கண்டிப்பாக இலங்கை அணியை மீட்டெடுத்து மீண்டும் வெற்றிநடை போட வைக்கமுடியும்.