#WIvsSL 2வது டி20யில் வெஸ்ட் இண்டீஸை பழிதீர்த்த இலங்கை..! பட்டைய கிளப்பிய பவுலர்கள்.. இலங்கை அபார வெற்றி
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இலங்கை அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி ஆண்டிகுவாவில் இன்று நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குணதிலகா மற்றும் நிசாங்கா ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 95 ரன்களை குவித்து கொடுத்தனர். நிசாங்கா 37 ரன்னில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த குணதிலகா 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அவர்கள் இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாமல் சொற்ப ரன்களில் வெளியேறியதால், 20 ஓவரில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் அடித்தது.
161 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர். லெண்டல் சிம்மன்ஸ்(21), எவின் லூயிஸ்(6), கிறிஸ் கெய்ல்(16), பூரான்(8), ஜேசன் ஹோல்டர்(9), ட்வைன் பிராவோ(2), பொல்லார்டு(13) என முக்கியமான வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேற, அந்த அணி 18.4 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 43 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இலங்கை பவுலர்கள் அபாரமாக பந்துவீசி, உலகின் மிகச்சிறந்த அதிரடி பேட்டிங் ஆர்டர்களில் ஒன்றான வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஆர்டரை சரித்தனர். இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஹசரங்கா மற்றும் சந்தாகன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு, 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பழிதீர்த்தது இலங்கை அணி.