இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்துவருகின்றனர். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களை குவித்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் - மயன்க் சிறப்பாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த மயன்க் அகர்வால் 60 ரன்னில் ஆட்டமிழக்க, புஜாரா ரன்னே அடிக்காமலும், கோலி 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் 3 வது விக்கெட்டுக்கு ராகுலும் ரஹானேவும் இணைந்து அருமையாக பேட்டிங் ஆடினர். சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்த ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் அடித்திருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது.

2ம் நாளான நேற்றைய ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 3ம் நாளான இன்றைய ஆட்டத்தில் களத்திற்கு வந்ததுமே ராகுல் 123 ரன்னில் ரபாடாவின் பந்தில் ஆட்டமிழக்க, ரஹானே (48) மற்றும் ரிஷப் பண்ட் (8) ஆகியோரை லுங்கி இங்கிடியும், ரவிச்சந்திரன் அஷ்வின் (4) மற்றும் ஷர்துல் தாகூர் (4) ஆகிய இருவரையும் ரபாடாவும் வீழ்த்தினர். ஷமியை 8 ரன்னில் இங்கிடி வீழ்த்த, கடைசி விக்கெட்டாக பும்ராவை 14 ரன்னில் மார்கோ ஜான்சென் வீழ்த்த, இந்திய அணி 327 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக லுங்கி இங்கிடி 6 விக்கெட்டுகளையும், அவருக்கு அடுத்தபடியாக ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டீன் எல்கரை முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் பும்ரா. முதல் செசன் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் அடித்திருந்தது தென்னாப்பிரிக்க அணி. 2வது செசன் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கீகன் பீட்டர்சனை 15 ரன்னில் போல்டாக்கிய ஷமி, மார்க்ரமை 13 ரன்னில் போல்டாக்கி அனுப்பினார். வாண்டெர் டசனை 3 ரன்னில் சிராஜ் வீழ்த்த, 32 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்க அணி. அதன்பின்னர் டெம்பா பவுமாவும் குயிண்டன் டி காக்கும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவருகின்றனர்.