இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது தென்னாப்பிரிக்க அணி. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது டி20 போட்டி இன்று கட்டாக்கில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.

தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), ரீஸா ஹென்ரிக்ஸ், ராசி வாண்டர் டசன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), ட்வைன் ப்ரிட்டோரியஸ், வைன் பார்னெல், கேஷவ் மஹராஜ், டப்ரைஸ் ஷாம்ஸி, ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஓவரிலேயே வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் அதிரடியாக ஆடிய 21 பந்தில் 34 ரன்கள் அடித்தார். நன்றாக அடித்து ஆடிய இஷான் கிஷன் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் பெரிதாக அடித்து ஆடாவிட்டாலும் 35 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். ஆனால் ரிஷப் பண்ட்(5) மற்றும் ஹர்திக் பாண்டியா(9) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அக்ஸர்படேலும் 10 ரன் மட்டுமே அடித்தார்.

14வது ஓவரில் களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக் முதல் 16 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இன்னிங்ஸின் 19வது ஓவரில் முதல் பவுண்டரி அடித்த தினேஷ் கார்த்திக், கடைசி ஓவரின் 4 மற்றும் 5வது பந்துகளில் 2 சிக்ஸர்களை விளாசி 21 பந்தில் 30 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுத்தார். தினேஷ் கார்த்திக்கின் ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 148 ரன்கள் அடித்தது இந்திய அணி.

149 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரீஸா ஹென்ரிக்ஸ்(4), ட்வைன் பிரிட்டோரியஸ்(4), வாண்டர்டசன்(1) ஆகிய மூவரையுமே புவனேஷ்வர் குமார் பவர்ப்ளேயில் வீழ்த்தினார். 29 ரன்களுக்கே தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

ஆனால் 4வது விக்கெட்டுக்கு டெம்பா பவுமா மற்றும் ஹென்ரிச் கிளாசன் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடினர். ஹென்ரிச் கிளாசன் களத்திற்கு வந்தது முதலே இந்திய பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினார். பவுமா 35 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் தொடர்ந்து அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஹென்ரிச் கிளாசன் 46 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்து கிட்டத்தட்ட போட்டியை முடித்து கொடுத்துவிட்டு ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு வெறும் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கிளாசன் ஆட்டமிழக்க, அதன்பின்னர் இலக்கை எளிதாக அடித்து 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2-0 என டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணி முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் தனி ஒருவனாக அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஆனால் அவருக்கு மற்ற பவுலர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால் இந்திய அணி தோற்க நேரிட்டது.