IND vs SL: ஷுப்மன் கில் அபார சதம்.. கோலி அரைசதம்.. மெகா ஸ்கோரை நோக்கி இந்திய அணி ஆட்டம்
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் அபாரமாக ஆடி சதமடித்தார். விராட் கோலியும் அரைசதம் அடிக்க, மெகா ஸ்கோரை நோக்கி இந்திய அணி ஆடிவருகிறது.
இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்டதால் கடைசி போட்டியில் சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவருக்கும் ஆட வாய்ப்பளிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ஷுப்மன் கில்லும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 95 ரன்களை சேர்த்தனர். ரோஹித் சர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.
தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் ஆடிய ஷுப்மன் கில் சதமடித்தார். அவருடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலியும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். சதமடித்த கில் 97 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 116 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு கில்லும் கோலியும் இணைந்து 131 ரன்களை குவித்தனர். விராட் கோலியும் சதத்தை நோக்கி ஆட, அவருடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்துள்ளார்.