நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மயன்க் அகர்வால், கோலியின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்த இந்திய அணியை, ஷ்ரேயாஸ் ஐயரும் கேஎல் ராகுலும் சேர்ந்து மீட்டெடுத்தனர். 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை 2-0 என நியூசிலாந்து அணி ஏற்கனவே வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 2 போட்டிகளில் தோள்பட்டை காயம் காரணமாக ஆடாமல் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளார். இந்திய அணியில் கேதர் ஜாதவுக்கு பதிலாக மனீஷ் பாண்டே சேர்க்கப்பட்டார். 

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். நாங்களும் இதைத்தான் எதிர்பார்த்தோம் என மிகுந்த ஆர்வமுடன் விராட் கோலி அதை ஏற்றுக்கொண்டார். 

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷாவும்ம் மயன்க் அகர்வாலும் களமிறங்கினர். மயன்க் அகர்வால் இந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. 2வது ஓவரிலேயே மயன்க் அகர்வால் ஜாமிசனின் பந்தில் வெறும் ஒரு ரன்னில் வெளியேறினார். இதையடுத்து களத்திற்கு வந்த கேப்டன் கோலியும் 12 ரன்னில் நடையை கட்டினார். 

ஆனால் மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் பிரித்வி ஷா, சிறப்பாக அடித்து ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடினார். பிரித்வி ஷாவிற்கு ஷாட்டுகள் சிறப்பாக கனெக்ட் ஆகின. எனவே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அடித்து கொண்டிருந்த பிரித்வி ஷா, 40 ரன்னில் அவசரப்பட்டு ரன் அவுட்டானார். 

13வது ஓவரின் முதல் பந்தை அடித்த பிரித்வி ஷா, இரண்டாவது ரன் ஓடக்கூடாத ஒன்றுக்கு, ஷ்ரேயாஸ் ஐயரை இரண்டாவது ரன்னுக்கு அழைத்து, ரன் அவுட்டாகிவிட்டார். அவரது ரன் அவுட்டுக்கு அவர் தான் காரணம். செம டச்சில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த அவருக்கு, இது தேவையில்லாத வேலை. பெரிய இன்னிங்ஸ் ஆடியிருக்கலாம். ஆனால் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயருடன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்தார். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். பொறுப்புடன் முதிர்ச்சியான பேட்டிங்கை வெளிப்படுத்தி நான்காவது விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், நீஷமின் பந்தில் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ராகுலுடன் மனீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய ராகுலும் அரைசதம் அடித்தார். கடைசி 5 ஒருநாள் இன்னிங்ஸில் ராகுலுக்கு இது 3வது அரைசதம். அரைசதத்துக்கு பின்னரும் ராகுல் சிறப்பாக ஆடிவருகிறார். அவருடன் இணைந்து மனீஷ் பாண்டே நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்திவருகிறார். இவர்கள் இருவரும் டெத் ஓவர்கள் வரை ஆடினால் இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டலாம். 36 ஓவரில் இந்திய அணி 192 ரன்களை அடித்துள்ளது.