தோனியை டி20 உலக கோப்பையில் ஆடுமாறு பிரதமர் மோடி அழைத்தால் தோனி ஆடுவார் என்று அக்தர் தெரிவித்துள்ளார்.  

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய 3 ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. சர்வதேச கிரிக்கெட்டின் சகாப்தம் தோனி. அவர் இந்திய அணிக்காக கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என ஒரு முழுமையான கிரிக்கெட்டராக அனைத்துவகையிலும் தனது பங்களிப்பை வழங்கினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

2004ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டுவரை 15 ஆண்டுகள் இந்திய அணியில் ஆடிய தோனி, 2019ல் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் தான் கடைசியாக ஆடினார். அதன்பின்னர் ஓராண்டாக எந்தவிதமான போட்டிகளிலும் ஆடாமல் இருந்த தோனி, கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

தோனி ஃபேர்வெல் போட்டியில் ஆடாமல் திடீரென ஓய்வு பெற்றதையடுத்து, அவர் மீண்டும் இந்திய அணிக்காக களத்தில் இறங்கி ஆடுவதைக்காண ஆவலாய் இருந்த ரசிகர்கள், அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அதனால் தோனிக்கு ஃபேர்வெல் போட்டியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. 

இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி தோனியை டி20 உலக கோப்பையில் ஆட அழைத்தால் தோனி ஆடுவார் என்று அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அக்தர், டி20 கிரிக்கெட்டில் மட்டும் தோனி ஆடியிருக்கலாம். டி20 உலக கோப்பையில் தோனி ஆடியிருக்கலாம். இந்தியர்கள், அவர்களது நட்சத்திரங்களை கொண்டாடும் விதம், அன்பு செலுத்தும் விதம் மற்றும் கொடுக்கும் அங்கீகாரம் ஆகியவை அபாரமானவை. அதற்காகவாவது தோனி டி20 உலக கோப்பையில் ஆடியிருக்கலாம். ஆனால் ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட முடிவு. 

ராஞ்சியிலிருந்து வந்து இந்தியாவையே கலக்கியவர் தோனி. இந்திய அணிக்காக 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர். இந்திய பிரதமர் மோடி, தோனியை டி20 உலக கோப்பையில் ஆடுமாறு கேட்டால், தோனி ஆடுவார். யாருக்கு தெரியும்.. எதுவும் நடக்கலாம். இம்ரான் கானை 1987ல் ஜெனரல் ஜியா உல் ஹக் கிரிக்கெட்டை விட்டு விலக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க இம்ரான் கான் ஆடினார். பிரதமரே கேட்டுக்கொள்ளும்போது, யாரும் மறுக்கமுடியாதல்லவா? என்று அக்தர் தெரிவித்துள்ளார்.