India vs South Africa: முதல் ஒருநாள் போட்டியில் வெங்கடேஷ் ஐயருக்கு பவுலிங் கொடுக்காதது ஏன்..? தவான் விளக்கம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெங்கடேஷ் ஐயரை இந்திய அணி பந்துவீசவைக்காதது ஏன் என ஷிகர் தவான் விளக்கமளித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி பார்லில் நடந்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, டெம்பா பவுமா (110) மற்றும் வாண்டர் டசனின் (129*) அபாரமான சதத்தால் 50 ஓவரில் 296 ரன்களை குவித்தது.
297 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 265 ரன்கள் மட்டுமே அடித்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என தென்னாப்பிரிக்கா அணி ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பலால் தான் இந்திய அணி தோற்றது. அதேவேளையில், பவுலிங்கும் அவ்வளவு சிறப்பாக இல்லை. பும்ரா மட்டுமே நன்றாக வீசினார். 10 ஓவரில் 48 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார் பும்ரா. புவனேஷ்வர் குமார் 64 ரன்கள் விட்டுக்கொடுக்க, ஷர்துல் தாகூர் 72 ரன்களை வாரி வழங்கினார். ஸ்பின்னர்கள் அஷ்வின் மற்றும் சாஹல் ஆகிய இருவரும் தலா 53 ரன்களை வழங்கினர். அஷ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய பவுலர்கள் அனைவருமே ரன்களை வாரிவழங்கியதுடன், டெம்பா பவுமா - வாண்டர் டசன் ஜோடியை பிரிக்க முடியாமல் திணறியபோதிலும், ஆல்ரவுண்டராக அணியில் எடுக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயருக்கு பவுலிங் வழங்கப்படவில்லை. வெங்கடேஷ் ஐயர் 6வது பவுலிங் ஆப்சன் தேவை என்பதற்காக ஆல்ரவுண்டராகத்தான் அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் மற்ற பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியபோதிலும், வெங்கடேஷ் ஐயருக்கு பவுலிங் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், அதற்கான காரணத்தை ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். வெங்கடேஷ் ஐயருக்கு பவுலிங் வழங்கப்படாதது குறித்து பேசிய ஷிகர் தவான், வெங்கடேஷ் ஐயரை பந்துவீசவைக்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் ஸ்பின்னர்கள் நன்றாக பந்துவீசினார்கள். பந்து அந்த பிட்ச்சில் நன்றாக திரும்பியது. டெத் ஓவர்களை ஃபாஸ்ட் பவுலர்கள் வீசுவார்கள். மிடில் ஓவர்களில் விக்கெட் விழாதபோது அணியின் மெயின் பவுலர்களை பந்துவீசவைத்து விக்கெட் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். எனவே வெங்கடேஷ் ஐயரை பந்துவீசவைக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது என்று ஷிகர் தவான் தெரிவித்தார்.