- Home
- Tamil Nadu News
- வெறும் கால்களில் 14 கிமீ..! அண்ணாமலையாருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய இந்திய அணி வீரர்கள்..
வெறும் கால்களில் 14 கிமீ..! அண்ணாமலையாருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய இந்திய அணி வீரர்கள்..
டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் அணியின் நட்சத்திர வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கிரிவலம் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஹாட்ரிக் மற்றும் உலக சாதனை
சர்வதேச கிரிக்கெட் ரசகர்களின் திருவிழாவாகப் பார்க்கப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடர் அண்மையில் நிறைவு பெற்றது. போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பான பங்களிப்பை அளித்து வந்த இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழத்தி கோப்பையைக் கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டு முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை இந்தியா படைத்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மூன்று முறை (2007, 2024, 2026) கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. மேலும், டி20 உலகக்கோப்பையைத் தக்கவைத்த (தொடர்ந்து இரண்டு முறை வென்ற) முதல் அணி மற்றும் சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற இரட்டைச் சாதனைகளையும் இந்தியா படைத்துள்ளது.
இறுதிப்போட்டியில் இமாலய ஸ்கோர்
இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 255/5 ரன்களைக் குவித்தது. இது டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு 2024-இல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியா எடுத்த 176 ரன்களே சாதனையாக இருந்தது.
சஞ்சு சாம்சனின் அதிரடி
இந்தத் தொடர் முழுவதும் அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன், இறுதிப்போட்டியில் 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவர் இந்தத் தொடரின் சிறந்த வீரராக (Player of the Tournament) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பும்ராவின் மிரட்டல் பந்துவீச்சு
இறுதிப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்காக அவருக்கு 'ஆட்டநாயகன்' விருது வழங்கப்பட்டது.
கௌதம் கம்பீரின் நெகிழ்ச்சியான பேச்சு
வெற்றிக்குப் பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமில் பேசிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர், "நீங்கள் 100 இருதரப்பு தொடர்களை (Bilateral series) வென்றாலும் அதை யாரும் நினைவில் கொள்ள மாட்டார்கள், ஆனால் இந்த உலகக்கோப்பையை எப்போதும் உலகம் நினைவில் வைத்திருக்கும்" என்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
திருவண்ணாமலையில் இந்திய வீரர்கள்
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் சுமார் 14 கிமீ தூரத்திற்கு வெறும் கால்களில் கிரிவலம் சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக உலகக்கோப்பை தொடருக்கு முன்பாகவும் வீரர்கள் இருவரும் அண்ணாமலையாரை தரிசித்து சென்றிருந்த நிலையில் தற்போது தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

