முதல் வீரராக ஏலம் விடப்பட்ட தவான்.. ரூ.8.25 கோடிக்கு எடுத்த அணி! அஷ்வினை ரூ.5 கோடிக்கு தட்டி தூக்கிய ராயல்ஸ்
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் முதல் வீரராக ஏலம் விடப்பட்ட ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அஷ்வினை ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது.
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் இன்றும் நாளையும் பெங்களூருவில் நடக்கிறது. 590 வீரர்கள் மொத்தமாக ஏலம் விடப்படுகின்றனர்.
பெங்களூருவில் இன்று பிற்பகல் 12 மணிக்கு ஏலம் தொடங்கப்பட்டது. முதல் வீரராக ஷிகர் தவான் ஏலம்விடப்பட்டார். டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடிவந்த ஷிகர் தவானை டெல்லி அணி தக்கவைக்கவில்லை. அவரை மெகா ஏலத்திற்கு முன்பாக விடுவித்தது.
அடிப்படை விலை ரூ.2 கோடியை கொண்ட ஷிகர் தவான் முதல் வீரராக ஏலம் விடப்பட்டார். அவரை எடுக்க, டெல்லி கேபிடள்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆர்வம் காட்டின. 5 கோடிக்கு மேல் ராஜஸ்தான் அணி ஒதுங்கிக்கொள்ள, அதன்பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்வம் காட்டியது. பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிடள்ஸ் அணி இடையே தவானுக்காக போட்டி நிலவியது.
கடைசியில் ரூ.8.25 கோடிக்கு தவானை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
அதன்பின்னர் 2வது வீரராக ஏலத்தில் விடப்பட்ட அஷ்வினை ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது.