இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானேவை நியமித்துவிட்டு, விராட் கோலியை வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் ஆடவைப்பது இந்திய அணியை மேலும் வலுப்படுத்தும் என்று ஆஸி., முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் லீ தெரிவித்துள்ளார். 

ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு, தனக்கு குழந்தை பிறக்கவிருந்ததால் இந்தியா திரும்பிவிட்டார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. அதனால், கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலும் ரஹானே தான் கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தினார். 

கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்த கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையுமே மிகக்கவனமாக செயல்பட்டு சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும் ரஹானே, இந்த தொடரிலும் அதை செய்தார். அதுவும், ஷமி, பும்ரா, ஜடேஜா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல், அஷ்வின் என அணியின் முக்கியமான நட்சத்திர வீரர்கள் காயத்தால் தொடர்ச்சியாக வெளியேறியபோதிலும், அனுபவமற்ற வீரர்களை வைத்துக்கொண்டு, அவர்களை சரியான முறையில் வழிநடத்தி, சிறப்பான களவியூகங்களை அமைத்து, ஆஸி., அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி கண்டார் ரஹானே.

களவியூகம், ஃபீல்டிங் செட்டப், வீரர்களை கையாண்ட விதம், காயத்தால் வெளியேறிய வீரர்களுக்கு மாற்று வீரர்களாக யார் யாரை இறக்கலாம் என்று எடுத்த முடிவு என அனைத்திலும் ஒரு கேப்டனாக ரஹானே சிறப்பாக செயல்பட்டதால்தான், இந்த வெற்றி சாத்தியமாயிற்று.

ரஹானேவின் கேப்டன்சியையும், அவரது கேப்டன்சியில் இந்திய அணி ஆடிய விதத்தையும் பார்த்த முன்னாள் ஜாம்பவான்கள் பலர் ரஹானேவையே இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனாக நியமிக்கலாம் என்று வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸி., முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் லீ, ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானேவின் கேப்டன்சிக்கு 10க்கு 10 மார்க் கொடுக்கலாம். அவர் மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தினார். அவரது கேப்டன்சியில் இந்திய அணி மிகச்சிறப்பாக ஆடியது.

கோலி ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். கோலியை இந்திய வீரர்கள் பெரிதும் மதிக்கின்றனர். அதேவேளையில், அவரைக்கண்டு வீரர்கள் பயப்படுகிறார்கள். கோலியின் கேப்டன்சியில் இந்திய வீரர்கள் ஒருவித பதற்றத்துடனேயே ஆடுகிறார்கள். ஆனால் ரஹானேவின் கேப்டன்சியில் ரிலாக்ஸாக ஆடுகின்றனர். கோலி அவராக கேப்டன்சியை விட்டுத்தர வாய்ப்பில்லை. ஆனால் இந்திய அணியின் தேர்வாளராக இருந்திருந்தால், ரஹானேவையே டெஸ்ட் அணியின் முழு நேர கேப்டனாக நியத்துவிட்டு, கோலியை பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வைப்பேன். அது இந்திய அணி மேலும் சிறப்பாக செயல்பட உதவும் என்று ஷேன் லீ தெரிவித்துள்ளார்.