இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தும்போது, அது கிட்டத்தட்ட இந்தியா சிறிய அணிகளை வீழ்த்துவது போல உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அந்த அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டது.

பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறாவிட்டால், அது ஒரு பெரிய விஷயமல்ல என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.இரு அணிகளின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தும்போது, அது சிறிய அணிகளை வீழ்த்துவது போல உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய விஷயமல்ல

இது தொடர்பாக பேசிய சஞ்சய் மஞ்ரேக்கர், ''இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறாவிட்டால், அது ஒரு பெரிய விஷயமல்ல. உண்மையைச் சொல்லப்போனால், நீண்ட காலமாகவே, போட்டிக்கு முன்பு நாம் உருவாக்கும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உண்மையான ஆட்டம் அமைவதில்லை. அதற்கான காரணம் வெளிப்படையானது. இந்தியாவும் பாகிஸ்தானும் இப்போது ஒரே தரத்தில் இல்லை. முன்பு, 90களிலும் அதற்கு முன்னரும், பாகிஸ்தான் ஒரு வலுவான அணியாக இருந்ததால் அது சுவாரஸ்யமாக இருந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் தரம் தாழ்ந்து விட்டது

ஆனால் இப்போது அப்படி இல்லை. இப்போது, இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தும்போது, அது கிட்டத்தட்ட இந்தியா சிறிய அணிகளை வீழ்த்துவது போல உள்ளது. முன்பு, பாகிஸ்தானை வீழ்த்தியதில் பெருமைப்பட்டிருக்கலாம். பாகிஸ்தான் கிரிக்கெட் அந்த அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டது. ஆசியக் கோப்பையிலும் நான் அதைப் பார்த்தேன். இந்திய கிரிக்கெட் அமைப்பிலிருந்து வரும் இளம் வீரர்களையும், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிலிருந்து வரும் வீரர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும். அது பூமிக்கும் வானத்திற்கும் உள்ள வித்தியாசம்" என்று தெரிவித்துள்ளார்.

போட்டியின் மதிப்பை குறைக்காது

"இந்த உலகக்க்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறாவிட்டால், அது ஒரு பெரிய விஷயமல்ல, ஏனென்றால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளன. அந்தப் போட்டிகள்தான் பார்க்க வேண்டியவை, மேலும் அந்த அணிகளைத்தான் இந்தியா வீழ்த்தி இந்த இந்திய அணியைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். ஆகவே பாகிஸ்தான் கலந்து கொள்ளாதது ஒரு சாதாரண நிகழ்வு. இது போட்டியின் மதிப்பைக் குறைக்கப் போவதில்லை என்று நான் நினைக்கிறேன்," என்றும் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.