#T20WorldCup இந்திய அணியில் அந்த சீனியர் வீரரை எடுக்காததில் ஆச்சரியம் எதுவும் இல்லை..! அது தெரிந்த விஷயம் தான்
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் எடுக்கப்படாததில் வியப்பு எதுவும் இல்லை; அது தெரிந்த விஷயம் தான் என்று இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சீனியர் தொடக்க வீரரான ஷிகர் தவானுக்கு இடம் கிடைக்கவில்லை. டி20 போட்டிகளில் கடந்த 2 ஆண்டுகளாக ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக இறங்கிவருகிறார்.
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை அதிரடியான தொடக்கம் அவசியம். அதை ரோஹித்துடன் இணைந்து ராகுல் சிறப்பாக செய்துவருகிறார். ஷிகர் தவான் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடினாலும், டி20 கிரிக்கெட்டில் அவரைவிட சிறந்த அதிரடி தொடக்க வீரராக ராகுல் திகழ்வதால் ஷிகர் தவானுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஷிகர் தவான் புறக்கணிப்பு குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் சபா கரீம், ஷிகர் தவான் புறக்கணிக்கப்பட்டது எனக்கு உண்மையாகவே ஆச்சரியமாக இல்லை. ஏனெனில் ரோஹித் - ராகுல் தொடக்க வீரர்களாக சிறப்பாக ஆடுகின்றனர். ஓபனிங்கில் அவர்கள் தயாராக உள்ளனர். கோலியும் அவரே தொடக்க வீரராக இறங்கும் அவரது ஆர்வத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறார். இஷான் கிஷனும் இருக்கிறார். தேவையென்றால் அவரையும் இறக்கலாம். எனவே ஷிகர் தவான் புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியம் இல்லை என்று சபா கரீம் தெரிவித்துள்ளார்.