#INDvsENG 2வது இன்னிங்ஸிலும் அசத்தும் ஹிட்மேன்..! கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிவிட்ட இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிவிட்டது.
இந்தியா இங்கிலாந்து இடையே சென்னையில் நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதம்(161), ரஹானே(67) மற்றும் ரிஷப் பண்ட்(58) ஆகியோரின் அரைசதம் ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 329 ரன்களை குவித்தது.
2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிய, முதல் செசனிலேயே முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, உணவு இடைவேளைக்கு முன்பாகவே 39 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. உணவு இடைவேளை முடிந்து 2வது செசனை தொடங்கிய சில நிமிடங்களில் ஸ்டோக்ஸ் 18 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து போப், லீச், ஸ்டோன், பிராட் ஆகியோர் ஆட்டமிழக்க, 2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் 3வது செசனில் 134 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது.
இந்திய அணியின் சார்பில் அஷ்வின் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்ஸர் படேல் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
195 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா முதல் இன்னிங்ஸை போலவே சிறப்பாக ஆடிவருகிறார். ரோஹித் சர்மா 25 ரன்களுடனும் புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில் 2ம் நாள் ஆட்டம் முடிந்தது. 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் முன்னிலை பெற்று மொத்தமாக 249 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 200 ரன்கள் அடித்தால் கூட, இங்கிலாந்துக்கு 450 ரன்கள் என்ற மெகா இலக்கு நிர்ணயிக்கப்படும். அதை இங்கிலாந்து அடிப்பது கண்டிப்பாக நடக்காத காரியம்.