டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று ஆஸி., முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கருத்து கூறியுள்ளார்.
இந்திய அணியில் 2004ம் ஆண்டு அறிமுகமான தினேஷ் கார்த்திக், இன்றுவரை இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார்.
2018 நிதாஹஸ் டிராபி ஃபைனலில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த தினேஷ் கார்த்திக் அதன்பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் பின்னர் மீண்டும் அணியில் இடத்தை இழந்தார்.
ஐபிஎல் 15வது சீசனில் ஆர்சிபி அணிக்காக அபாரமாக விளையாடி பல போட்டிகளை சிறப்பாக முடித்து கொடுத்து தன்னை ஒரு ஃபினிஷராக நிலைநிறுத்தினார். 16 போட்டிகளில் 183 ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் ஆடி 330 ரன்களை குவித்த தினேஷ் கார்த்திக், 37 வயதில் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல்லில் அபாரமாக ஆடியதன் விளைவாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து ஆடிவருகிறார்.
இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், 5ம் அல்லது 6ம் பேட்டிங் ஆர்டரில் கண்டிப்பாக நான் தினேஷ் கார்த்திக்கை எடுப்பேன். அவர் ஆர்சிபிக்காக பல போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தார். அவரது ஆட்டத்தை வேற லெவலுக்கு எடுத்துச்சென்றிருக்கிறார்.
ஆர்சிபி அணியில் கோலி, மேக்ஸ்வெல், ஃபாஃப் ஆகியோரை விட தினேஷ் கார்த்திக் தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இல்லையென்றால் நான் ஆச்சரியப்படுவேன் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.
