இந்த பந்து எங்களுக்கு வேண்டாம்..எல்லா பந்தையும் எடுத்துட்டு வாங்க;நானே செலக்ட் பண்றேன்! கெத்து காட்டிய அஷ்வின்
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட்டில் அம்பயர்கள் கொடுத்த புதிய பந்தை ஏற்க மறுத்து, அனைத்து புதிய பந்துகளையும் பரிசோதித்து சிறந்த பந்தை தேர்வு செய்தார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் இடையே பந்து மாற்றப்படும். புதிய பந்தை ஃபீல்டிங் அணி தேர்வு செய்துகொள்ளலாம். ஃபீல்டிங் செய்யும் அணியின் சீனியர் பவுலர் புதிய பந்தை தேர்வு செய்வது வழக்கம். அந்தவகையில், இந்திய அணிக்கு சீனியர் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஷ்வின் புதிய பந்தை தேர்வு செய்வார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட்டில் அம்பயர்கள் கொடுத்த புதிய பந்தின் மீது திருப்தி இல்லாததால், அதை ஏற்க மறுத்தார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 197 ரன்களும் அடித்தன. 130 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 174 ரன்கள் அடிக்க, 305 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அம்பயர் புதிய பந்தை கொடுக்க, அதை பரிசோதித்த அஷ்வின், பந்தின் மீது திருப்தியில்லாததால் அதை அம்பயரிடம் திருப்பி கொடுக்க, அம்பயர் ஏன் என்று கேட்க, உடனடியாக அஷ்வினுடன் இணைந்த கேப்டன் கோலி, பந்தை திருப்பி கொடுத்தார். அதன்பின்னர் புதிய பந்துகள் அடங்கிய பாக்ஸை எடுத்துவர, அதிலிருந்த பந்துகளை பரிசோதித்த அஷ்வின், நல்ல பந்தை தேர்வு செய்துகொடுத்தார்.
தென்னாப்பிரிக்காவில் கூக்கபரா பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. கூக்கபரா பந்துகள் அடங்கிய பாக்ஸில், அனைத்து பந்துகளின் சீமையும் பார்த்த அஷ்வின், அதில் சிறந்ததை தேர்வு செய்துகொடுத்தார். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தாமதமானது.