RR vs DC: முதல் அரைசதம் அடித்த அஷ்வின்.. படிக்கல் அதிரடி பேட்டிங்..! DCக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த RR
டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் ரன்கள் 160 அடித்து, 161 ரன்கள் என்ற சவாலான இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் டெல்லி கேபிடள்ஸும் ஆடிவருகின்றன. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க இந்த இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக முக்கியமானது.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணி 2 மாற்றங்களுடனும், ராஜஸ்தான் அணி ஒரு மாற்றத்துடனும் களமிறங்கின.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 7 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 ரன்னிலும் ஆட்டமிழக்க, 3வது விக்கெட்டுக்கு அஷ்வினும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து சிறப்பாக ஆடி 53 ரன்களை சேர்த்தனர். அருமையாக பேட்டிங் ஆடிய அஷ்வின் ஐபிஎல்லில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் கூட, இதுதான் முதல் அரைசதம்.
அதிரடியாக பேட்டிங் ஆடிய தேவ்தத் படிக்கல் 48 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை 2 ரன்னில் தவறவிட்டார். சஞ்சு சாம்சன்(6), ரியான் பராக்(9), வாண்டர் டசன் (12) ஆகிய மூவரும் சோபிக்காத காரணத்தால் நல்ல ஃபினிஷிங் கிடைக்காததால் 20 ஓவரில் 160 ரன்கள் மட்டுமே அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 161 ரன்கள் என்ற சவாலான இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.