தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணியில் ஷிகர் தவானை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் புறக்கணித்துள்ளார்.
ஐபிஎல் முடிந்ததும் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த டி20 தொடரில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் ஆகிய டாப் ஆர்டர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசிய உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் முதல் முறையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல்லில் சிறப்பாக ஆடியதன் விளைவாக சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். ராகுல் திரிபாதி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறாதது விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில், சீனியர் வீரரான ஷிகர் தவான் டி20 அணியில் இடம்பெறாததும் பலருக்கு ஏமாற்றமளித்தது. சுரேஷ் ரெய்னாவே அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்துவந்த தவான், கேஎல் ராகுலின் எழுச்சிக்கு பிறகு ஓரங்கட்டப்பட்டார். ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 விதமான அணிகளிலும் அவர் ஓரங்கட்டப்பட்டார். தென்னாப்பிரிக்க தொடரில் ரோஹித், கோலி ஆடாதபோதிலும், ஐபிஎல்லில் நன்றாக பேட்டிங் ஆடிய சீனியர் வீரரான தவானை எடுக்காதது ஏமாற்றம் தான்.
2016 ஐபிஎல்லில் இருந்து 2021 ஐபிஎல் வரை அனைத்து சீசன்களிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்த தவான், இந்த சீசனில் 14 போட்டிகளில் 460 ரன்கள் அடித்தார். அவர் ஆடிய பஞ்சாப் அணி லீக் சுற்றுடன் வெளியேறியதால் இந்த சீசனில் அவரால் 500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட முடியவில்லை. ஆனால் தவான் பேட்டிங்கில் எந்த குறையுமில்லை. இருந்தும் கூட இந்திய டி20 அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், அவர் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. டி20 கிரிக்கெட்டில் அபாரமாக பேட்டிங் ஆடிவரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக, தவானை ராகுல் டிராவிட் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், ஷிகர் தவான் இந்திய கிரிக்கெட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த பங்காற்றியிருக்கிறார். ஆனால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில், நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக ராகுல் டிராவிட் தான், தவானை புறக்கணிக்கும் கடினமான முடிவை எடுத்தார்; தேர்வாளர்களும் ஒப்புக்கொண்டனர். அணி அறிவிக்கப்படும் முன்பே ஷிகர் தவானிடம் இந்த தகவலை ராகுல் டிராவிட் தெரிவித்துவிட்டார் என்று அந்த பிசிசிஐ அதிகாரி கூறியிருக்கிறார்.
