என்னை மன்னித்துவிடுங்கள்.. நான் செய்தது தவறுதான்.! நிறவெறி விவகாரத்தில் மண்டியிட்டு சரணடைந்த குயிண்டன் டி காக்
நிறவெறிக்கு எதிராக மண்டியிட்டு குரல் கொடுக்க மறுத்த குயிண்டன் டி காக், இப்போது நான் செய்தது தவறுதான் என்று மண்டியிட்டு சரணடைந்துள்ளார்.
ஆப்பிரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நிறவெறியால் உயிர் பலியாவதை எளிதாக கடந்து சென்றுவிட முடியாது. அமெரிக்காவில் நடந்த நிறவெறி கொலை சம்பவத்திற்கு, உலகம் முழுதும் உள்ள அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் என பலதரப்பினரும், தங்களால் முடிந்த வகையில்/வழியில் நிறவெறிக்கு எதிராக குரல் எழுப்பிவருகின்றனர்.
அந்தவகையில், கிரிக்கெட் வீரர்கள் போட்டிக்கு முன்பாக மண்டியிட்டு கையை உயர்த்தி, நிறவெறிக்கு எதிரான குரல்களை பதிவு செய்துவருகின்றனர். டி20 உலக கோப்பையில் அனைத்து அணிகளும் இந்த முறையில், நிறவெறிக்கு எதிரான குரல்களை பதிவு செய்கின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் மண்டியிட்டு கையை உயர்த்தி, கருப்பின மக்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
நிறவெறிக்கு எதிராக குரல் கொடுப்பதில் முன்னிலையில் நிற்க வேண்டிய நாடு தென்னாப்பிரிக்கா. எனவே, அந்தவகையில் இந்த டி20 உலக கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க வீரர்கள் மண்டியிட்டு கையை உயர்த்தி நிறவெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்(கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா) அறிவுறுத்தியிருந்தது.
இதையும் படிங்க - எங்கே செல்லும் இந்த பாதை..? ஐபிஎல் அணியை வாங்கிய சூதாட்ட நிறுவனம்
தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் குயிண்டன் டி காக், இதற்கு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டார். அதனால் அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஆடிய முதல் போட்டியில் ஆட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இதுதான் காரணம் என்பதை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை. குயிண்டன் டி காக் அவரது தனிப்பட்ட காரணங்களுக்காக ஆடவில்லை என்றுதான் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தான், நிறவெறிக்கு எதிராக குரல் கொடுக்க முன்வராததால் தான் அவர் ஆடவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து குயிண்டன் டி காக்கின் செயல்பாடு இந்நாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், டி காக் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், நிறவெறிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டியிருந்தது. குயிண்டன் டி காக் நிறவெறிக்கு எதிராக குரல் கொடுக்க முடியாது என்று வீராப்புடன் கூறி, ஒரு போட்டியில் ஆடாமல் இருக்கலாம். ஆனால் நிறவெறிக்கு எதிராக குரல் கொடுத்தால்தான் அவரால் அடுத்தடுத்த போட்டிகளில் ஆடமுடியும்.
இந்த கட்டாயத்தின் பின்னணியில், தற்போது தனது செயலுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுள்ளார் குயிண்டன் டி காக். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது அணி சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோரிடம் முதலில் மன்னிப்பு கேட்டு எனது இந்த அறிக்கையை தொடங்குகிறேன்.
இதை குயிண்டன் டி காக்கின் பிரச்னையாக்க நான் விரும்பியதில்லை. நிறவெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை புரிந்துகொண்டேன். மேலும், நாங்கள் கிரிக்கெட் வீரர்களாக, இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் புரிந்துகொண்டேன். நான் மண்டியிடுவதால் பலருக்கு பாடம் கற்பிக்க முடியுமென்றால் அதை செய்வதில் எனக்கு மகிழ்ச்சிதான்.
இதையும் படிங்க - T20 World Cup: India vs New Zealand போட்டியில் இந்திய அணி இந்த 2 மாற்றங்களை செய்தே தீரணும்..! கவாஸ்கர் அதிரடி
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நான் ஆடாததன் மூலம், யாரையும் அவமதிக்கவில்லை. அவமதிக்கும் நோக்கத்தில் நான் அப்படி செய்யவும் இல்லை. குழப்பத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தும் விதமாக எனது செயல்பாடு இருந்ததற்கு நான் என் அடிமனதிலிருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நானும் நிறக்கலப்பு குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். இது நிறைய பேருக்கு தெரியாது. எனது வளர்ப்புத்தாய் கருப்பினத்தவர் தான். கருப்பின மக்களின் உயிர்/வாழ்க்கை எவ்வளவு முக்கியம் என்பது நான் பிறந்ததிலிருந்து எனக்கு தெரியும். இது ஒரு சர்வதேச இயக்கமாக முன்னெடுக்கப்பட்டிருப்பதால் மட்டும் நான் இதை கூறவில்லை. உரிமைகளும், சமத்துவமும் அனைவருக்கும் முக்கியமானது என்று குயிண்டன் டி காக் மனதார மன்னிப்பு கேட்டுள்ளார்.
நிறவெறிக்கு எதிராக மண்டியிட்டு குரல் கொடுக்க மறுத்த குயிண்டன் டி காக், இப்போது நான் செய்தது தவறுதான் என்று மண்டியிட்டு சரணடைந்துள்ளார்.