IPL Auction 2022: கேகேஆர், குஜராத் டைட்டன்ஸுடன் சண்டை போட்டு இங்கி., வீரரை பெரும் தொகை கொடுத்து எடுத்த PBKS
கேகேஆர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுடன் கடும் போட்டி போட்டி கடைசியில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.11.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக மயன்க் அகர்வால் (ரூ.14 கோடி) மற்றும் அர்ஷ்தீப் சிங் (ரூ.4 கோடி) ஆகிய இருவரை மட்டுமே தக்கவைத்த பஞ்சாப் கிங்ஸ் அணி, ரூ.72 கோடி என்ற அதிகபட்ச தொகையுடன் ஏலத்திற்கு வந்தது. அதனால் வேண்டிய வீரர்களை அதிகமான தொகை கொடுத்து எடுக்கும் வசதி அந்த அணிக்கு இருந்தது.
அதை பயன்படுத்தி ககிசோ ரபாடாவிற்கு ரூ.9.25 கோடி, ஷாருக்கானுக்கு ரூ.9 கோடி, ஷிகர் தவானுக்கு ரூ.8.25 கோடி, ஜானி பேர்ஸ்டோவுக்கு ரூ.6.75 கோடி என பெரும் தொகை கொடுத்து எடுத்தது. அதுபோக, இளம் ஃபாஸ்ட் பவுலர் இஷான் போரெல், ஸ்பின்னர் ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார், பிரப்சிம்ரான் சிங் ஆகிய உள்நாட்டு வீரர்களையும் எடுத்தது.
இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனுக்கு ஆரம்பத்தில் சிஎஸ்கே அணி ஆர்வம் காட்ட, சிஎஸ்கேவிற்கும் கேகேஆருக்கும் இடையே போட்டி நிலவியது. சிஎஸ்கே ஒரு கட்டத்தில் விலகிக்கொள்ள ரூ.4 கோடிக்கு மேல் கேகேஆருடன் பஞ்சாப் கிங்ஸ் போட்டி போட்டது. கேகேஆரும் பஞ்சாப் கிங்ஸும் அடித்துக்கொள்வதை பார்த்து, குஜராத் டைட்டன்ஸும் இந்த போட்டியில் இணைந்தது. ஆனால் எத்தனை அணிகள் போட்டிக்கு வந்தாலும் லிவிங்ஸ்டோனை விட்டுக்கொடுக்க விரும்பாத பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை ரூ.11.50 கோடிக்கு எடுத்தது. இந்த ஏலத்தில், இதுவரை அதிகபட்ச தொகைக்கு எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் லிவிங்ஸ்டோன் தான்.
2019 மற்றும் 2021 ஆகிய ஐபிஎல் சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடியிருக்கும் லிவிங்ஸ்டோன், 9 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 112 ரன்கள் அடித்துள்ளார். லெக் ஸ்பின்னும் வீசக்கூடியவர் என்பதால், ஒரு ஆல்ரவுண்டராக மிகவும் பயனுள்ளவராக திகழ்வார் என்ற காரணத்திற்காக அவருக்கு பெரிய தொகையை கொடுத்து எடுத்துள்ளது பஞ்சாப் அணி.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வெஸ்ட் இண்டீஸின் ஒடீன் ஸ்மித்தையும் ரூ.6 கோடிக்கு எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.