#IPL2021Auction எங்களையும் சேர்த்துக்கங்க.. ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்படும் பரிதாப வீரர்களும் பதிவு
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது பெயரை கொடுத்துள்ளார்.
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் வரும் 18ம் தேதி சென்னையில் நடக்கிறது. அந்த ஏலத்திற்காக வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்யும் கால அவகாசம் இன்றுடன் முடிந்த நிலையில், இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த மொத்தம் 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த வீரர்கள் 813 பேரும், 283 வெளிநாட்டு வீரர்களும் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த 813 உள்நாட்டு வீரர்களில் 21 பேர், இந்தியாவிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியவர்கள். 743 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிராத உள்நாட்டு வீரர்கள். 186 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியவர்கள்.
டெஸ்ட் வீரர்கள் என்பதற்காகவே ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் புறக்கணிக்கப்படும் புஜாரா, ஹனுமா விஹாரி ஆகிய வீரர்கள் தொடர்ச்சியாக ஐபிஎல் ஏலத்தில் தங்கள் பெயர்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அவர்களை எந்த அணியும் எடுப்பதில்லை.
இம்முறையும் புஜாரா, ஹனுமா விஹாரி ஆகிய வீரர்கள் தங்கள் பெயரை பதிவிட்டுள்ளனர். ஹனுமா விஹாரி அவரது அடிப்படை விலையாக ரூ.1 கோடியும், புஜாரா ஐம்பது லட்சமும் நிர்ணயித்துள்ளனர்.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இடது கை ஃபாஸ்ட் பவுலரான அவர் பேட்டிங்கும் ஆடக்கூடியவர். சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணியில் ஆடிய அவரும், தனது பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவிட்டுள்ளார். அவரது அடிப்படை விலை ரூ.20 லட்சம்.
2013 ஐபிஎல்லில் சூதாட்டப்புகாரால் தடை பெற்று, தடை முடிந்து மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள ஃபாஸ்ட் பவுலர் ஸ்ரீசாந்த், தனது பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவிட்டு, அடிப்படை விலையாக ரூ.75 லட்சம் நிர்ணயித்துள்ளார்.