எங்க ஊரு வீரர்களுக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ..? ராயுடு புறக்கணிப்பில் உள்குத்தா..? சர்ச்சையை கிளப்பிய முன்னாள் வீரர்
4ம் வரிசையில் ராயுடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கடைசி இரண்டு தொடர்களில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தி கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர்.
உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.
நீண்ட இழுபறியில் இருந்த 4ம் வரிசை வீரருக்கான இடத்திற்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. 4ம் வரிசையில் ராயுடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கடைசி இரண்டு தொடர்களில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தி கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். அதனால் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் நம்பியிருந்த ராயுடுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நான்காம் வரிசைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி பல வீரர்களை பரிசோதித்தது. ஆனால் கடைசி இரண்டு மாதங்களில் சிறப்பாக ஆடி நான்காம் இடத்தை பிடித்துவிட்டார் விஜய் சங்கர். விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நிதானமாக சூழலுக்கு ஏற்றவாறு பேட்டிங் ஆடும் அதேவேளையில், சில பெரிய ஷாட்டுகளையும் ஆடுகிறார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கும் வீசுவார் என்பதாலும் ஃபீல்டிங்கும் சிறப்பாக செய்வதாலும் இவையனைத்தையும் கருத்தில் கொண்டு விஜய் சங்கரை எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்தார்.
ராயுடுவின் நீக்கத்திற்கு காம்பீர் உட்பட பல முன்னாள் வீரர்கள் வருத்தம் தெரிவித்தனர். உலக கோப்பை அணியில் தன்னை ஓரங்கட்டிய கடுப்பில் இருந்த ராயுடு, விஜய் சங்கர் ஒரு 3 டைமன்ஷனல் வீரர் என்று பிரசாத் தெரிவித்திருந்ததை குறிப்பிட்டு கிண்டலாக டுவீட் செய்திருந்தார். உலக கோப்பையை காண இப்போதுதான் 3டி கண்ணாடி ஆர்டர் செய்துள்ளதாக ராயுடு பதிவிட்டுள்ளார். விஜய் சங்கரின் தேர்விற்கு சொல்லப்பட்ட காரணத்தை கிண்டல் செய்யும் விதமாக இந்த பதிவை இட்டிருந்தார் ராயுடு.
ராயுடுவுக்கு ஆதரவாக அவரது டுவீட்டிற்கு பதிலளித்த முன்னாள் ஸ்பின் பவுலர் பிரக்யன் ஓஜா, தானும் இதேபோன்றதொரு சூழலை எதிர்கொண்டதாகவும் ஹைதராபாத் வீரர்கள் சிலருக்கு மட்டும் இதேபோன்று நடப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
Curious case of some Hyderabadi cricketers... been in a similar situation... understand the wink✌🏼 https://t.co/zLtAQIMvYn
— Pragyan Prayas Ojha (@pragyanojha) April 16, 2019
ஹைதராபாத் வீரர்களுக்கு இதுபோன்று நடப்பதாக கூறியிருப்பதன் மூலம் அணி தேர்வில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அமைந்துள்ளதால் ஓஜாவின் கருத்து சர்ச்சையாகியுள்ளது.