இங்கிலாந்துக்கு எதிரான இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் அஷ்வினை இந்திய அணி கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது முஷ்டாக் தெரிவித்துள்ளார். 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் ஆடவில்லை. அந்த போட்டியில் அஷ்வின் ஆடாததே கடும் விமர்சனத்துக்குள்ளானது. எந்த கண்டிஷனிலும் சிறப்பாக பந்துவீசக்கூடிய சீனியர் ஸ்பின்னரான அஷ்வினை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்திய அணி தேர்வையும் விமர்சித்தனர்.

எனவே 2வது டெஸ்ட்டில் அஷ்வின் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது டெஸ்ட்டிலும் அஷ்வின் ஆடவில்லை. மறுபடியும் 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடியது இந்திய அணி. 

கண்டிஷனை கருத்தில் கொண்டுதான் 2வது டெஸ்ட்டில் அஷ்வினை எடுக்காமல் 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடியதாக கேப்டன் விராட் கோலி விளக்கமளித்திருந்தார். அதுகுறித்து அஷ்வினும் தெளிவுபடுத்தினார். லண்டன் லார்ட்ஸில் 2வது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால் தான், தான் ஆடவில்லை என்றும், கண்டிஷனை கருத்தில்கொண்டு 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் இந்திய அணி ஆட வேண்டியிருந்ததால், தான் ஆடவில்லை என்றும் அஷ்வின் தெரிவித்திருந்தார்.

ஆனால் அஷ்வினை இனிவரும் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முஷ்டாக் முகமது கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முஷ்டாக் முகமது, இந்திய அணி 3 ஃபாஸ்ட் பவுலர்களுடன் தான் ஆடியிருக்க வேண்டும். அஷ்வினை சேர்க்காதது முட்டாள்தனம். அஷ்வின் மேட்ச் வின்னர். பந்து திரும்பும்போது, ஆட்டத்தையே மாற்றிவிடுவார் அஷ்வின். ஒரு ஃபாஸ்ட் பவுலரை நீக்கிவிட்டு அஷ்வினை சேர்த்திருந்திருக்கலாம்.

அஷ்வின் அணிக்கு நல்ல பேலன்ஸை கொடுப்பார். ஜடேஜா அவரது பவுலிங்கை மேம்படுத்த வேண்டும். நிறைய ஃபுல் லெந்த் பந்துகளை வீசுகிறார். அதை ஆடுவது பேட்ஸ்மேன்களுக்கு எளிதாகிறது. ஜடேஜாவின் பேட்டிங், ஆற்றல், ஃபீல்டிங் என அனைத்துமே அபாரமாக இருந்தாலும், பவுலிங்கில் அவர் மேம்பட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு இந்த பவுலிங் போதாது.

இந்திய அணிக்கு அஷ்வின் முக்கியமான வீரர். இஷாந்த் சர்மாவை விட அஷ்வின் நன்றாக பேட்டிங்கும் ஆடுவார். இங்கிலாந்தில் இந்த காலக்கட்டத்தில் கண்டிப்பாக 2 ஸ்பின்னர்கள் ஆட வேண்டும். ஜடேஜா ஏமாற்றமளிக்கிறார். எனவே அஷ்வின் கண்டிப்பாக ஆடியாக வேண்டும் என்று முஷ்டாக் முகமது தெரிவித்துள்ளார்.