என் பவுலிங் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி ஆடிய ஒரே பேட்ஸ்மேன் அவரு மட்டும் தான்..! முரளிதரன் அதிரடி
இலங்கை அணியின் முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னரான முத்தையா முரளிதரன், தனது பவுலிங் மீது ஆதிக்கம் செலுத்திய பேட்ஸ்மேன் யார் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியில் 1992ம் ஆண்டு அறிமுகமாகி 19 ஆண்டுகாலம் கோலோச்சியவர் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன். ஸ்பின் பவுலிங் என்றாலே உடனடியாக முரளிதரன் தான் நினைவுக்கு வருவார். அந்தளவிற்கு தரமான ஸ்பின்னர். ஒரு ஸ்பின் பவுலர் 19 ஆண்டுகள் கோலோச்சுவது சாதாரண விஷயம் அல்ல.
முரளிதரன் ஆடிய காலங்களில் இருந்த சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஸ்டீவ் வாக் உள்ளிட்ட பல பேட்டிங் ஜாம்பவான்களை தனது சுழலில் மிரட்டியவர் முரளிதரன். 133 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முரளிதரன் தான் முதலிடத்தில் உள்ளார். முரளிதரனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் ஷேன் வார்னே, முரளிதரனை விட 92 விக்கெட்டுகள் பின் தங்கித்தான் உள்ளார்.
முரளிதரனின் இந்த சாதனையை இனிமேல் வேறு ஒரு பவுலர் முறியடிப்பது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாத விஷயம். சச்சின், லாரா, ராகுல் டிராவிட், பாண்டிங், ஜாக் காலிஸ், மேத்யூ ஹைடன், ஆடம் கில்கிறிஸ்ட், சயீத் அன்வர் உள்ளிட்ட பல சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு தனது கெரியரில் பந்துவீசியுள்ளார்.
இந்நிலையில், ஆல்டைம் சிறந்த ஸ்பின்னரான முரளிதரன், தன் கிரிக்கெட் கெரியரில் தான் பந்துவீசியதில் மிகவும் சவாலான பேட்ஸ்மேன் யார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த முத்தையா முரளிதரன், பல சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு நான் பந்துவீசியிருக்கிறேன். ஆனால் அவர்களில் பந்துவீச மிகவும் கடினமான ஒரு பேட்ஸ்மேனை தேர்வு செய்ய வேண்டுமென்றால், அது கண்டிப்பாக பிரயன் லாரா தான். பிரயன் லாராவுக்கு எதிராக நிறைய டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறேன். ஸ்பின் பவுலிங்கை மிகத்திறமையாக ஆடக்கூடியவர் பிரயன் லாரா. அதனால் எனது பவுலிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினார் என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.