IPL 2021 ஆவேஷ் கான், அக்ஸர் அபார பவுலிங்..! MI அணியின் பவர் ஹிட்டர்கள் சொதப்பல்.. DC அணிக்கு சவாலான இலக்கு
டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவரில் 129 ரன்கள் அடித்து, 130 ரன்கள் என்ற இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் டெல்லி கேபிடள்ஸும் ஆடிவருகின்றன. ஷார்ஜாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா வெறும் 7 ரன்னில் 2வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான குயிண்டன் டி காக்கும் 19 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இந்த போட்டிக்கு முந்தைய கடைசி 5 போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறிய சூர்யகுமார் யாதவ், இந்த போட்டியில் ஃபார்முக்கு வந்து அடித்து ஆடினார். அவருக்கு நல்ல தொடக்கம் கிடைத்த நிலையில், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 33 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார் சூர்யகுமார்.
இதையடுத்து பொல்லார்டு(6), ஹர்திக் பாண்டியா(17) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர். ஜெயந்த் யாதவ் டெத் ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் விளாச, இன்னிங்ஸின் கடைசி பந்தில் க்ருணல் பாண்டியா சிக்ஸர் விளாச, 20 ஓவரில் 129 ரன்கள் அடித்த மும்பை அணி 130 ரன்கள் என்ற இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்துள்ளது.
ஷார்ஜா பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருப்பதால், 130 ரன்கள் என்பதே சற்று சவாலான இலக்குதான்.