IPL 2022: எங்க தோல்விக்கு இவங்கதான் காரணம்.. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஆதங்கம்
ஐபிஎல் 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விகளுக்கு என்ன காரணம் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், 5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் படுமோசமாக விளையாடி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது.
இந்த சீசனில் ஆடிய 8 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 8 போட்டிகளில் ஒன்றில் கூட மும்பை அணி ஜெயிக்காதது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக 8 தோல்விகளின் காரணமாக இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ அணிக்கு எதிராக ஆடிய 8வது போட்டியில் 169 ரன்கள் என்ற இலக்கை விரட்ட முடியாமல் 36 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ரோஹித் சர்மா 39 ரன்களும், திலக் வர்மா 38 ரன்களும் அடித்தனர். அவர்கள் இருவரைத்தவிர மற்றவர்கள் இந்த அளவிற்கு கூட ஆடவில்லை. பவுலர்கள் நன்றாக பந்துவீசி, கேஎல் ராகுல் சதமடித்தபோதிலும், லக்னோ அணியை 168 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. ஆனால் பேட்டிங் சொதப்பலால் 169 ரன்கள் என்ற இலக்கைக்கூட அடிக்க முடியமால் படுதோல்வி அடைந்தது.
அந்த தோல்விக்கு பின்னர் பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, எங்கள் பவுலர்கள் நன்றாகத்தான் பந்துவீசினார்கள். ஆனால் பேட்டிங் ஆடுவதற்கு நல்ல ஆடுகளமான வான்கடேவில் எங்கள் பேட்ஸ்மேன்கள் சரியாக பேட்டிங் ஆடவில்லை. இதுமாதிரியான (169) இலக்கை விரட்டும்போது பார்ட்னர்ஷிப் அவசியம். ஆனால் எங்கள் அணியில் பார்னர்ஷிப்பே அமையவில்லை. என்னுடைய ஷாட் உட்பட சில பொறுப்பற்ற ஷாட்டுகள் தான் தோல்விக்கு காரணம். இந்த தொடர் முழுவதுமாகவே எங்கள் அணியின் பேட்டிங் சரியில்லை என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.