இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வீட்டில் திருட்டு நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Robbery At Mohammad Azharuddin's House: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். இவரது மனைவி சங்கீதா பிஜ்லானி. இவருக்கு சொந்தமாக புனேவின் லோனாவலாவில் உள்ள பங்களாவில் ரூ.57,000 மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கொள்ளையர்கள் ரூ.50,000 ரொக்கப் பணம் மற்றும் ரூ.7,000 மதிப்புள்ள டி.வி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

முகமது அசாருதீன் வீட்டில் திருட்டு

கடந்த மார்ச் 7 முதல் ஜூலை 18, 2025 வரை பங்களாவில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. லோனாவலாவில் உள்ள திக்கோனா பேட், மாவல் தாலுகா, புனே மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பங்களாவில் மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். பங்களாவின் பின் பக்க சுவரில் உள்ள கம்பி வலைகளை வெட்டி, முதல் மாடிக்குச் சென்று, அங்கிருந்த ஜன்னல் கிரில்லை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

போலீசில் புகார்

பின்பு பணத்தையும், டி.வி.யையும் கொள்ளையடுத்து சென்றனர். திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.57,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கொள்ளையர்கள் வீட்டிற்குள் இருந்த சில பொருட்களையும் வேண்டுமென்றே உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து முகமது அசாருதீனின் 54 வயதான தனிப்பட்ட உதவியாளர் முகமது முஜிப் கான், லோனாவலா ரூரல் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு

இந்த புகாரின் பேரில் பாரதிய நியாய சம்ஹிதா (BNS) சட்டத்தின் 331(3), 331(4), 305(a), 324(4), மற்றும் 324(5) ஆகிய பிரிவுகளின் கீழ் மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளையர்களை அடையாளம் காணவும், திருடப்பட்ட பொருட்களை மீட்கவும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் ஆதாரங்களைச் போலீசார் சேகரித்து வருகின்றனர். விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். முன்னாள் இந்திய கேப்டன் வீட்டில் திருட்டுப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.