IPL Auction 2022: எலியையும் பூனையையும் அணியில் எடுத்த கம்பீர்..! லக்னோ அணியில் இனிமேல் தான் இருக்கு கச்சேரி
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி எலியும் பூனையுமாக திகழும் தீபக் ஹூடா மற்றும் க்ருணல் பாண்டியா ஆகிய இருவரையும் சேர்த்து எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று (பிப்ரவரி 12) நடந்த முதல் நாள் ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 2 சண்டைக்கார வீரர்களை சேர்த்து எடுத்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த சீசனில் புதிதாக களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, ஏலத்திற்கு முன்பாக கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும் வாங்கியிருந்தது. முதல் நாள் ஏலத்தில் சில நல்ல வீரர்களை எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை ரூ.8.75 கோடிக்கும், இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட்டை ரூ.7.5 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது. குயிண்டன் டி காக்கை ரூ.6.75 கோடிக்கு எடுத்தது.
இந்திய வீரர்களில் ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கானை அதிகபட்சமாக ரூ.10 கோடிக்கும், ஸ்பின் ஆல்ரவுண்டர் க்ருணல் பாண்டியாவை ரூ.8.25 கோடிக்கும், தீபக் ஹூடாவை ரூ.5.75 கோடிக்கும், மனீஷ் பாண்டேவை ரூ.4.60 கோடிக்கும் எடுத்தது. அங்கித் ராஜ்பூத்தை ரூ.50 லட்சத்திற்கு எடுத்தது. இவர்களில் தீபக் ஹூடாவையும், க்ருணல் பாண்டியாவையும் சேர்த்து எடுத்ததுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க்ருணல் பாண்டியாவிற்கு தீபக் ஹூடாவிற்கும் இடையே நல்ல புரிதல் இல்லை. உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர்கள் இருவரும் பரோடா அணிக்காக இணைந்து ஆடும்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு நடந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் பரோடா அணியில் க்ருணல் பாண்டியாவின் கேப்டன்சியில் ஆடிய தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா தன்னை வேண்டுமென்றே மற்றவீரர்கள் முன்பு மோசமான வார்த்தைகளால் திட்டுவதாகவும், தன் மீது பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும் கடிதம் மூலம் புகார் கூறியிருந்தார்.
ஆனால் தீபக் ஹூடாவின் புகாரின் அடிப்படையில் க்ருணல் பாண்டியா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தீபக் ஹூடா அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் ஐபிஎல்லிலும் அவர்களுக்கு இடையேயான மோதல் நீடித்தது.
இந்நிலையில், க்ருணல் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரையும், கம்பீர் ஆலோசகராக இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இருவரும் இணைந்து ஐபிஎல்லில் ஒரே அணியில் ஆடவிருக்கின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து ஆடுவதைக்காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
தீபக் ஹூடாவுக்கும் க்ருணல் பாண்டியாவுக்கும் இடையே பரோடா அணியில் ஏற்பட்ட மோதல், லக்னோ அணியில் முடிவுக்கு வரும் என வீரேந்திர சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.