இலங்கை - வங்கதேசம் இடையேயான போட்டியின் போது களத்தில் மோதிக்கொண்ட இலங்கை வீரர் லஹிரு குமாரா மற்றும் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் ஆகிய இருவருக்கும் அபராதம் விதித்துள்ளது ஐசிசி. 

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று ஷார்ஜாவில் நடந்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, முகமது நைம்(62) மற்றும் முஷ்ஃபிகுர் ரஹீம்(57) ஆகிய இருவரின் பொறுப்பான அரைசதத்தால் 20 ஓவரில் 171 ரன்களை குவித்தது வங்கதேச அணி.

172 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணி, அசலங்கா(80) மற்றும் ராஜபக்‌ஷேவின்(53) அதிரடியான மற்றும் பொறுப்பான பேட்டிங்கால் 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி.

இந்த போட்டியில் இலங்கை ஃபாஸ்ட் பவுலர் லஹிரு குமாராவின் செயல்பாடுகள் அத்துமீறி இருந்தன. களத்தில் வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்வது வழக்கமான ஒன்று. ஆனால் ஸ்லெட்ஜிங்/சீண்டல் என்ற பெயரில் அத்துமீறி நடந்துகொண்டார் லஹிரு குமாரா.

வங்கதேச இன்னிங்ஸின் 4வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய லஹிரு குமாரா, அந்த ஓவரின் கடைசி பந்தில் பேட்ஸ்மேன் நைம் அடித்துவிட்டு க்ரீஸை விட்டு வெளியே வந்ததால் ஸ்டம்ப்பை நோக்கி ஆக்ரோஷமாக வீசினார். நல்லவேளையாக நைம் ஒதுங்கிவிட்டார். இல்லையெனில் அந்த பந்து பேட்ஸ்மேன் நைம் மீது அடித்திருக்கும்.

அத்துடன் நில்லாமல், பவர்ப்ளேயின் கடைசி ஓவரான 6வது ஓவரை வீசிய லஹிரு குமாரா, அந்த ஓவரின் 5வது பந்தில் லிட்டன் தாஸை வீழ்த்திவிட்டார். அவுட்டாகி களத்தைவிட்டு வெளியேறிய லிட்டன் தாஸிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் லஹிரு குமாரா. வேண்டுமென்றே வந்து சீண்டிய குமாராவை லிட்டன் தாஸும் சும்மா விடவில்லை. குமாராவிடம் பேட்டை நீட்டி பதிலுக்கு முறைத்தார் லிட்டன் தாஸ். இதையடுத்து உடனடியாக இலங்கை வீரர்களும், அம்பயர்களும் வந்து, சமாதானப்படுத்தி அந்த சூழலை மேலும் கடினமாக்காமல் இயல்பாக்கினர்.

இந்நிலையில், களத்தில் ஐசிசி விதிகளை மீறி மோதிக்கொண்ட குமாரா மற்றும் லிட்டன் தாஸுக்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி. சண்டைக்கு வித்திட்டு அதிகபிரசங்கித்தனமாக நடந்துகொண்ட லஹிரு குமாராவிற்கு போட்டி ஊதியத்தில் 25 சதவிகிதமும், அவருக்கு எதிர்வினையாற்றிய லிட்டன் தாஸுக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவிகிதமும் அபராதமாக விதித்துள்ளது ஐசிசி.