இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து களமிறங்கியுள்ள குல்தீப்பும் சாஹலும் சிறப்பாக பந்துவீசிவருகின்றனர். 

இந்தியா - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் இன்று நடந்துவருகிறது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இந்த போட்டி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் அறிமுகமாகியுள்ளனர். 2019 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இணைந்து ஆடிராத குல்தீப் யாதவ் - யுஸ்வேந்திர சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி இந்த போட்டியில் மீண்டும் இணைந்து ஆடுகிறது.

முதலில் பேட்டிங் ஆடிவரும் இலங்கை அணியின் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் மினோத் பானுகா ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இந்திய ஃபாஸ்ட் பவுலர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சாஹரின் பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு, முதல் விக்கெட்டுக்கு 49 ரன்களை சேர்த்தனர். 

அவிஷ்கா ஃபெர்னாண்டோவை 32 ரன்களுக்கு வீழ்த்தி பிரேக் கொடுத்தார் யுஸ்வேந்திர சாஹல். அதைத்தொடர்ந்து மினோத் பானுகா(27) மற்றும் பானுகா ராஜபக்சா(24) ஆகிய இருவரையும் குல்தீப் யாதவ் வீழ்த்த, 89 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி.

தனஞ்செயா டி சில்வாவும் அசலங்காவும் இணைந்து ஆடிவருகின்றனர். 2017ம் ஆண்டிலிருந்து 2019 வரை ஒருநாள் போட்டிகளில் மிடில் ஓவர்களில் அபாரமாக பந்துவீசி எதிரணி பேட்டிங் ஆர்டரை சரித்து இந்திய அணியின் வெற்றிகளுக்கு உதவிய குல்தீப் - சாஹல் ஜோடி, 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து களத்தில் கலக்கிவருகின்றனர்.