IPL 2022: மெகா ஏலத்திற்கு முன் லக்னோ அணி ஒப்பந்தம் செய்யும் 3 வீரர்கள் இவங்கதான்..!
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக லக்னோ அணி, கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய 3 வீரர்களையும் ஒப்பந்தம் செய்கிறது.
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக இணைகின்றன. அதனால் இந்த சீசன் முதல் 10 அணிகள் ஐபிஎல்லில் ஆடவுள்ளன. எனவே இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால், அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது.
கேஎல் ராகுல், டேவிட் வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் ஆகிய பெரிய வீரர்கள் சிலர் அவர்கள் சார்ந்த அணிகளிலிருந்து வெளிவந்துள்ளனர். லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகளும், ஏலத்திற்கு முன்பாக அதிகபட்சம் 3 வீரர்களை வாங்கிக்கொள்ளலாம்.
அந்தவகையில், அகமதாபாத் அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ரிஸ்ட் ஸ்பின்னர் ரஷீத் கான் ஆகிய 2 மேட்ச் வின்னர்களுடன், 3வது வீரராக ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் வாங்குகிறது.
மற்றொரு புதிய அணியான லக்னோ அணி, கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும் ஒப்பந்தம் செய்கிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் அந்த அணியிலிருந்து வெளியேறிய நிலையில், அவரை ரூ.15 கோடிக்கும், ஆஸ்திரேலிய வீரரான மார்கஸ் ஸ்டோய்னிஸை ரூ.11 கோடிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிவந்த இளம் ரிஸ்ட் ஸ்பின்னரான ரவி பிஷ்னோயை ரூ.4 கோடிக்கும் ஒப்பந்தம் செய்கிறது லக்னோ அணி.