அப்படினா நான் வெளியே உட்காரணுமா..? கோலி குறித்த நிருபரின் கேள்வியால் கடுப்பான ராகுல்
விராட் கோலி குறித்த நிருபரின் கேள்வியால் கேஎல் ராகுல் கடும் அதிருப்தியடைந்தார்.
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி 70 சதங்களை விளாசியிருந்த நிலையில், 71வது சதத்தை 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்த கோலி, அதன்பின் சுமார் 3 ஆண்டுகளாக சதமே அடிக்காமல் இருந்தார்.
அதனால் கோலி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. கோலி தொடர்ச்சியாக அரைசதங்கள் அடித்து 70-80 ரன்கள் அடித்துக்கொண்டே தான் வந்தார். ஆனால் அவர் ஏற்கனவே செட் செய்த பென்ச்மார்க் உச்சபட்சமானது என்பதால், அவரிடமிருந்து சதங்கள் எதிர்பார்க்கப்பட்டன. கோலி சதமடிக்கவில்லை என்றதும் விமர்சனங்கள் எழுந்தன.
இதையும் படிங்க - விராட் கோலி சதம்.. புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்..! ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி
இந்நிலையில், ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் ரோஹித் சர்மா ஆடாததால் கேஎல் ராகுலுடன் விராட் கோலி தொடக்க வீரராக இறங்கினார். இந்த போட்டியில் இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 119 ரன்களை குவித்து கொடுத்தனர். ராகுல் 41 பந்தில் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அபாரமாக பேட்டிங் ஆடிய விராட் கோலி சதமடித்தார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு சதமடித்தார் கோலி. இது சர்வதேச கிரிக்கெட்டில் அவரது 71வது சதம். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது முதல் சதம் ஆகும்.
இந்த போட்டியில் 212 ரன்களை குவித்த இந்திய அணி, 111 ரன்களுக்கு ஆஃப்கானிஸ்தானை சுருட்டி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் இந்த போட்டியின் கேப்டன் கேஎல் ராகுல். அப்போது ராகுலிடம், ஐபிஎல்லில் விராட் கோலி ஓபனிங்கில் ஆடி 5 சதங்கள் அடித்திருக்கிறார். இந்த போட்டியிலும் ஓபனிங்கில் ஆடி சதமடித்திருக்கிறார். எனவே துணை கேப்டனாக நீங்க, அணி நிர்வாகத்திடம் ரோஹித்துடன் கோலியே தொடக்க வீரராக இறங்கலாம் என்று பரிந்துரைப்பீர்களா?என்று நிருபர் ராகுலிடம் கேட்டார்.
இந்த கேள்வியால் அதிருப்தியடைந்த ராகுல், நான் பென்ச்சில் உட்காரவேண்டும் என்று நினைக்கிறீர்களா..? என்று எதிர் கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்தார்.
இதையும் படிங்க - Asia Cup: அவரை எடுக்காததுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம்! ராகுல் டிராவிட், ரோஹித்தை விளாசிய ரவி சாஸ்திரி
ரோஹித் சர்மா ஆடினால், ரோஹித் சர்மாவுடன் ராகுல் தான் தொடக்க வீரராக இறங்குவார். மிகச்சிறந்த வீரரான ராகுலும் நன்றாகத்தான் ஆடிவருகிறார். ரோஹித்துடன் கோலி தொடக்க வீரராக இறங்கினால் ராகுலுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காது. ஆனால் சிறந்த வீரரான ராகுலை அணி நிர்வாகம் ஓரங்கட்டாது. இந்நிலையில் தான், இப்படியொரு கேள்விக்கு அதிருப்தியடைந்தார் ராகுல்.