கேஎல் ராகுலின் அபார சதம் மற்றும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியாவின் காட்டடியால் 50 ஓவரில்  336 ரன்களை குவித்து, இங்கிலாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி. 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான்(4), ரோஹித் சர்மா(25) ஆகிய இருவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழக்க, கேப்டன் கோலியும் 4ம் வரிசையில் இறங்கிய ராகுலும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். பொறுப்புடன் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த கோலி 79 பந்தில் 66 ரன்களுக்கு அடில் ரஷீத்தின் சுழலில் ஆட்டமிழந்தார்.

கோலி ஆட்டமிழக்கும்போது இந்திய அணியின் ஸ்கோர் 32 ஓவருக்கு 158 ரன்கள். அதன்பின்னர் ராகுலுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ராகுல் அரைசதம் அடிக்க, 40வது ஓவரை நெருங்கியபோது, ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே அடித்து ஆட தொடங்கினர்.

ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச, அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக ஆடிய ராகுல் சதமடிக்க, ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார். சதமடித்த ராகுல், 108 ரன்னில் டாம் கரனின் பந்தில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா களத்திற்கு வந்த முதல் பந்தே சிக்ஸருக்கு விளாசி மிரட்டினார். அவருடன் இணைந்து ரிஷப் பண்ட்டும் சிக்ஸர் மழை பொழிய அணியின் ஸ்கோர் மேலும் வேகமாக உயர்ந்தது.

அதிரடியாக ஆடி ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய ரிஷப் பண்ட், 40 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்தார். ஹர்திக் பாண்டியா 16 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடிக்க, இந்திய அணி 50 ஓவரில் 336 ரன்களை குவித்து 337 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி.