IPL 2022: முரட்டு சிக்ஸரில் நாற்காலியை உடைத்த ஆண்ட்ரே ரசல்..! வைரல் வீடியோ
வலைப்பயிற்சியின்போது கேகேஆர் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் அடித்த சிக்ஸரில் நாற்காலியில் ஓட்டை விழுந்தது. அந்த வீடியோவை கேகேஆர் அணி டுவிட்டரில் பகிர்ந்ததையடுத்து, அது செம வைரலாக பரவிவருகிறது.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த சீசனை தொடங்கிய கேகேஆர் அணி, ஆரம்பத்தில் நன்றாக ஆடி வெற்றிகளை பெற்றாலும், அதன்பின்னர் தொடர் தோல்விகளை தழுவிவருகிறது.
இந்த சீசனின் தொடக்கத்தில் புள்ளி பட்டியலில் டாப்பில் இருந்த கேகேஆர் அணி, 8 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் இப்போது புள்ளி பட்டியலில் 8ம் இடத்தில் உள்ளது.
வெங்கடேஷ் ஐயர் சோபிக்காதது, ஷ்ரேயாஸ் ஐயர் பெரிய இன்னிங்ஸ் ஆடாதது, பவுலிங்கில் வருண் சக்கரவர்த்தி எதிரணி வீரர்களிடம் அடி வாங்குவது, மோசமான டெத் பவுலிங் என பல காரணங்களின் விளைவாக தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது கேகேஆர்.
எனவே கேகேஆர் அணிக்கு வெற்றி அவசியம் என்ற நிலையில், ஏப்ரல் 28ம் தேதி கேகேஆர் அணி டெல்லி கேபிடள்ஸை மும்பை வான்கடேவில் எதிர்கொள்கிறது. அதற்காக கேகேஆர் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.
கேகேஆர் அணியின் ஒருசில நம்பிக்கைகளில் முக்கியமான நம்பிக்கையாக திகழும் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல், பயிற்சியில் பந்துகளை பறக்கவிடுகிறார். பயிற்சியில் ஆண்ட்ரே ரசல் அடித்த சிக்ஸரில் நாற்காலி உடைந்தது. ஆண்ட்ரே ரசலின் அடித்த ஷாட் நாற்காலியை பதம்பார்த்து, நாற்காலியில் ஓட்டையை போட்டது. அந்த வீடியோவை கேகேஆர் அணி டுவிட்டரில் பகிர, அது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.