IPL Auction 2022: கிடைத்துவிட்டார் புதிய கேப்டன்..! ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு தட்டி தூக்கிய ஐபிஎல் அணி
ஐபிஎல் அணியை வழிநடத்த தகுதியான வீரரான ஷ்ரேயாஸ் ஐயரை, புதிய கேப்டனுக்கான தேடலில் இருந்துவந்த கேகேஆர் அணி ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் இன்று பிற்பகல் 12 மணிக்கு பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
முதல் வீரராக ஏலம் விடப்பட்ட ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அஷ்வினை ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் அணி எடுத்தது. ககிசோ ரபாடாவை ரூ.9.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும், நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் டிரெண்ட் போல்ட்டை ரூ.8 கோடிக்கு ராஜஸ்தான் அணியும் எடுத்தது.
டெல்லி கேபிடள்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் ஏலம் விடப்பட்டார். புதிய கேப்டனை நியமிக்கும் கட்டாயத்தில் இருந்த கேகேஆர் அணி ஷ்ரேயாஸ் மீது ஆர்வம் காட்டியது. ஷ்ரேயாஸ் ஐயரை 4 வீரர்களில் ஒருவராக தக்கவைக்காத டெல்லி அணி, ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டியது.
ரூ.9 கோடியுடன் டெல்லி அணி ஒதுங்கிக்கொள்ள, அதன்பின்னர் கேகேஆர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே ஷ்ரேயாஸ் ஐயருக்கான போட்டி நடந்தது. கடைசியில் ரூ.12.25 கோடிக்கு கேகேஆர் அணி ஷ்ரேயாஸ் ஐயரை எடுத்தது. ஏற்கனவே ஆண்ட்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் ஆகிய வீரர்களை கொண்ட கேகேஆர் அணி, ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்கும் என்பதில் சந்தேகமில்லை. புதிய கேப்டனுக்கான ஆப்சனாகத்தான் அந்த அணி ஷ்ரேயாஸை எடுத்துள்ளது. ஐபிஎல்லில் டெல்லி அணியை வெற்றிகரமாக வழிநடத்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கேப்டன்சியில் தான் முதல் முறையாக டெல்லி அணி ஐபிஎல் ஃபைனலுக்கு சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.