மும்பை இந்தியன்ஸுக்கு  எதிரான போட்டியில் கேகேஆர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் மோதிய போட்டி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

மும்பை இந்தியன்ஸ் அணி:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, திலக் வர்மா, கைரன் பொல்லார்டு, டிம் டேவிட், ராமன் தீப் சிங், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், குமார் கார்த்திகேயா, ஜஸ்ப்ரித் பும்ரா, ரிலே மெரிடித்.

கேகேஆர் அணி:

அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷெல்டான் ஜாக்சன் (விக்கெட்கீப்பர்), பாட் கம்மின்ஸ், டிம் சௌதி, வருண் சக்கரவர்த்தி.

முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ரஹானே நிதானமாக ஆட, வெங்கடேஷ் ஐயர் தொடக்கம் முதலே அடித்து ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர், 24 பந்தில் 43ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய ரஹானே 25 ரன்னில் ஆட்டமிழந்தார். 14வது ஓவரின் முதல் பந்தில் ஷ்ரேயாஸ் ஐயரை 6 ரன்னில் முருகன் அஷ்வின் வீழ்த்த, அப்போது கேகேஆர் அணியின் ஸ்கோர் 123 ரன்கள். 15வது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரில் ஆண்ட்ரே ரசல் (9) மற்றும் நிதிஷ்ராணா(43) ஆகிய இருவரையும் வீழ்த்தினார். அதற்கடுத்து பும்ரா வீசிய 18வது ஓவரில் சுனில் நரைன், பாட் கம்மின்ஸ் மற்றும் ஷெல்டான் ஜாக்சன் ஆகிய மூவரையும் வீழ்த்த, 20 ஓவரில் 165 ரன்களுக்கு கேகேஆரை கட்டுப்படுத்தியது மும்பை அணி. அபாரமாக பந்துவீசிய பும்ரா 4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தினார். -

166 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 113 ரன்களுக்கு சுருண்டு 52 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.